பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

"எங்கய்யா கணேசன் ?" கரகர குரலில் கலைஞர் கேட்கிறார்....


"எங்கப்பா மாப்பிள்ளைய காணோம், தலைவர் வர்ற நேரமாயிடுச்சி ?"
"கொஞ்ச நேரமாவே காணோம்ங்க, தேடிகிட்டு தான் இருக்கோம்."

தலைவர் கலைஞர் ஜெயங்கொண்டம் வந்துவிட்டார். மண நிகழ்விடமான பிரிமியர் கலா பேலஸிற்கும் வந்துவிட்டார். மேடையிலும் வந்து அமர்ந்து விட்டார். மணமகன் இன்னும் வரவில்லை. "எங்கய்யா கணேசன் ?" கரகர குரலில் கலைஞர் கேட்கிறார். "தேடிகிட்டு இருக்கோம் அய்யா".

அருகே அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளர் அன்பில் தர்மலிங்கம், தமிழக அமைச்சர். அவரிடத்தில் ஒரு கழகத் தோழர் தயங்கி தயங்கி வந்து விஷயத்தை சொல்கிறார். "கணேசன் கண்டியன்கொல்லைக்கு போயிட்டாருங்க" "சரி. நான் போய் அழைச்சுகிட்டு வர்றேன்". அன்பில் கிளம்புகிறார். தமிழகத்தின் முதலமைச்சர் காத்திருக்கிறார், மணமகனுக்காக.

க.சொ.கணேசன், உடையார்பாளையம் வட்ட செயலாளர். தீவிர சுயமரியாதைக் கொள்கைக்காரர். சைக்கிளில் சென்று கழகம் வளர்த்தவர். பேரறிஞர் அண்ணாவின் அன்புக்கு பாத்திரமானவர். தலைவர் கலைஞரிடத்தில் அன்பாக வாதிடும் அளவுக்கு நெருக்கமானவர். அந்த க.சொ.கணேசன் தான் மணமகன். நாள் - 02.08.1972.

ராகுகாலத்தில் தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென தலைவர் கலைஞரிடத்தில் கேட்டிருந்தார். ராகுகாலத்திற்கு முன்னதாகவே கலைஞர் மேடைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தான் சொந்த கிராமத்திற்கு கிளம்பி சென்று விட்டார். ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கி.மீ தூரம்.

அமைச்சர் அன்பிலார் சென்று அழைத்து வருகிறார், சரியான ராகுகாலத்தில் மேடை ஏறுகிறார் மணமகன். "ஏன்யா கணேசா, இப்படியா பண்றது ?" செல்லமாகக் கடிந்து கொள்கிறார் தலைவர் கலைஞர். "நீங்க முன்னாடியே வந்துட்டா என்ன பண்றது, அதனால தான். நான் கொள்கைய விட்டுத் தர முடியுமா ?" இது க.சொ.க. சிரித்துக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்குகிறார் தலைவர்

தன் திருமணம் மட்டுமல்ல, தான் சார்ந்த அத்தனை நிகழ்வுகளையும் முடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியாகவே நடத்தியவர் க.சொ.க. வாழும் வரை கொள்கை நழுவாது வாழ்ந்தவர். வெற்றியோ, தோல்வியோ அயராமல் கழகப்பணி ஆற்றியவர்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக, இரண்டு முறை ஒன்றிய பெருந்தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். மக்கள் மனதைவிட்டு இன்றும் நீங்காதவராக மக்கள் தொண்டராக வாழ்ந்து காட்டியவர்.

நாற்பதாண்டு காலமாக அவர் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எழுப்பிய கோரிக்கை, மதனத்தூர் - நீலத்தநல்லூர் இடையே கொள்ளிடத்தில் ஒரு மேம்பாலம். அவர் மறைந்த பிறகே, கடந்த கழக ஆட்சிக் காலத்தில் அவர் கனவை நனவாக்கினோம். அணைக்கரை பாலம் சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட போது, இந்த பாலமே உதவியாக அமைந்தது.

இன்று அவர் மறைந்து எட்டு வருடங்கள். அவர் நினைவிடத்தில் கழகத்தோழர்கள் நினைவஞ்சலி செலுத்தினோம். முன்னாள் ச.ம.உ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் தனசேகர், நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளும், அவரது மகன் தா.பழூர் ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

# காலம் உள்ளளவும் மக்கள் தொண்டர் க.சொ.க நினைவிருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக