பிரபலமான இடுகைகள்

சனி, 7 செப்டம்பர், 2013

தி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 3

புதுக்கோட்டை இணையப் பயிற்சி பாசறை (தொடர்ச்சி 3)

ஆனால் அவரை நினைத்து தைரியமாக பேசினேன்....யாரவர், தலைவர் கலைஞர் தான். 

"திராவிட இயக்க துவக்க காலத்தில் 40க்கு மேற்பட்ட சிறு பத்திரிக்கைகள் மூலமாக கழகத்தின் கொள்கைகளை கொண்டு சேர்த்தார்கள் (பின்னர் அய்யா சுப.வீ பேசும் போது திராவிட இயக்க பத்திரிக்கைகள் 134 என பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார்). திராவிடநாடு, முரசொலி, மன்றம், தென்றல், பகுத்தறிவு என பல பத்திரிக்கைகள். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர், நாவலர், கண்ணதாசன், சத்தியவாணிமுத்து என ஒவ்வொருவரும் ஒரு பத்திரிக்கை நடத்தி வந்தனர். இப்போது நாம் அதே போல் ஒரு பேஸ்புக் பக்கம் எழுதி வருகிறோம்"

இந்த இடத்தில் தலைவர் கலைஞரை குறிப்பிடும் போது தான் "காலத்தால் மாறி வரும் களப்பணிகள்" என்பதற்கு அவரே வாழும் உதாரணம் என்பது தோன்றியது, லைனை பிடித்தேன். "இப்படி சிறு பத்திரிக்கையை களமாக கொண்டிருந்த தலைவர், மேடை பேச்சு களத்தை கையில் எடுத்தார். அடுத்து நாடகம், திரைப்படம், ஊடகம் என்று மாறி வரும் சூழலுக்கு ஏற்ப களம் அமைத்தவர், இன்று இன்றைய சூழலுக்கு ஃபேஸ்புக் வரை தன்னை அப்டேட் செய்து கொண்டுள்ளார். அவரை பின்பற்றினாலே போதும்."


                          

நான் என் கல்லூரி நண்பர்களின் அழைப்பை ஏற்றே முகநூல் கணக்கை துவக்கினேன். இதன் மூலம் இவ்வளவு சிறப்பான களம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வெண்மணி என்ற கிராமத்திற்கு சென்ற போது கட்சிக்கு தொடர்பில்லாத ஒரு இளைஞர் (ராம்குமார்) வரவேற்றார். நிர்வாகிகள் இவரை எப்படி தெரியும் என்று ஆச்சரியம் அடைந்தார்கள். முகநூல் மூலமாக என்றேன்.

இன்னும் வேடிக்கை, அவர் கல்லூரி இருக்கும் தெருவில் தான் என் வீடு இருக்கிறது. ஆனால் என்னை அவர் சந்தித்ததில்லை. முகநூல் நட்புக்கு பிறகே சந்தித்தார். முகநூல் இல்லையென்றால் எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்காது. இப்போது அவர் அந்தப் பகுதியின் பிரச்சினையை என் கவனத்திற்கு எடுத்து வருகிறார். இப்படி கல்லூரியில் படிக்கும், வெளியூரில் பணியிலிருக்கும் இளைஞர்கள் என்னோடு நிறைய பேர் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் முகநூல் தான் காரணம்.

எங்கள் செந்துறை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளஞ்செழியன் சிறப்பாக கவிதை எழுதக்கூடியவர் என்பது முகநூல் மூலமாகத் தான் தெரியும். கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எஸ்.பி.மகேந்திரன், அரங்கன்.தமிழ் போன்ற தோழர்கள், எம்.எல்.ஏ என்ற கண்ணோட்டத்தில் கிட்ட வந்தே இருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது முகநூலால் என்னோடு தொடர்பில் இருப்பது மாத்திரமல்லாமல் இங்கே நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்."

"எனவே முகநூலை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே. என்னை ஒரு காலத்தில் Ipadம் கையுமாக அலைகிறேன் என்று கிண்டல் செய்த ரசூல், மலர்வண்ணன் ஆகியோர் தான் இன்று நாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை முதலில் அப்டேட் செய்பவர்கள். இங்கே வந்திருக்கிறார்கள்."

முகநூலில் இயங்குகின்ற கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவர்கள். நானும் அபிஅப்பாவும் நீண்ட ஸ்டேடஸ் போடுபவர்கள். சித்தன் ஆனந்த் சுருக்கமாக நச் என்று போடுவார், நாட்டு நடப்பை சுவையாக விமர்சிப்பார். டான் அசோக் எந்த செய்தியையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர்.

மயிலைநாதனும், நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்சும் நகைச்சுவையாக சொல்லி திணறடிப்பார்கள். தினகரன் அரசு, இளவரசன் அரைமணிக்கொரு பதிவு போட்டு அசரடிப்பர். ரா.அசோக் ரெண்டு வரி பாட்டு போட்டு அப்புறம் அரசியல் பேசுவார். அன்சாரி அதிரடியாக களம் இறங்குவார். நாகூர் ஜலால் போட்டோக்கள் கலக்கல். (எல்லோருடைய சிறப்பையும் குறிப்பிட நேரம் ஒத்துழைக்கவில்லை) இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளத்தில் இயங்கினால் சிறப்பாக இருக்கும்.

அண்ணன் பெரியண்ணன் அரசு சரியான நேரத்தில் களம் அமைத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது. ஜெயலலிதா ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் தாண்டி விட்டது. இந்த ஆட்சியின் தவறுகளை நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும். பொதுவான பிரச்சினையிலேயே எல்லோரும் கவனம் செலுத்த வேண்டாம். உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுங்கள். நான் எங்கள் பகுதி மக்கள் பிரச்சினையான முந்திரி விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து கவனம் செலுத்துகிறேன்." என ஒருவாறாக பேசி முடித்தேன்.

(தொடரும்)....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக