பிரபலமான இடுகைகள்

திங்கள், 23 டிசம்பர், 2013

ஜட்ஜாக எனது ஆட்டத்தின் முடிவு இது.

நீதியரசர் ஏ.கே.கங்குலி - ஒரு கட்டுரை வரைக.


                        


முன்னுரை: 

நீதியரசர் ஏ.கே.கங்குலி அவர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவர் 1.கண்டிப்பானவர். 2.நேர்மையானவர். 3.அப்பாவியானவர். 4.வெளிப்படையானவர். 5.உண்மையானவர்.

1.கண்டிப்பானவர்: 

"8000 ஆவணங்களை ஆய்வு செய்திருக்கிறீர்கள். ஆனால் இன்னும் நீங்கள் பறவையை விட்டு விட்டு இன்னும் புதரை தான் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். குற்றம் தெளிவாக தெரிகிறது. சி,பி.ஐ-யால் ரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நடவடிக்கை தேவை.

"எங்களது கேள்வி குறிப்பானது. நீங்கள் ராஜாவை விசாரித்தீர்களா ? இதில் அவரது ஈடுபாடு தொடர் நடவடிக்கைககளால் முழுமையானது"

இப்படி சி.பி.ஐயை வறுத்தெடுத்தார். (26.நவம்பர்.2010). இதன் மூலம் இவர் கண்டிப்பானவர் என்பதை நாம் அறியலாம்.

2.நேர்மையானவர்:

"எப்போதெல்லாம் அரசியலமைப்பு சட்டப் பிரச்சினை அல்லது அரசு கொள்கை பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு வருகின்றனவோ, அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் உறுதிபடுத்துபவை, அவை எடுக்கின்ற முடிவுகள் அதன் மேல் மக்களுடைய நம்பிக்கையை மேம்படுத்துபவையாக அமையும், 2G உரிமங்கள் ரத்திலும் இந்த பென்ச் அதே போல முடிவு எடுத்திருக்கிறது."

"எல்லா தீர்ப்புகளும் மக்களுடைய நம்பிக்கையை பெற வேண்டும். அதே போல இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்"

இப்படி 122 உரிமங்களை ரத்து செய்த போது நேர்மையாக தீர்ப்பளித்தார். (2.பிப்ரவரி.2012)

(ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு தீப்பளித்தார் என்ற குற்றச்சாட்டை இங்கு நினைவுக் கொள்ளக் கூடாது)

3.அப்பாவியானவர்:

"என் மீதான குற்றங்களை மறுக்கிறேன். நான் சந்தர்ப்பத்தால் குற்றவாளியாக்கப் பட்டிருக்கிறேன். நான் அதிர்ச்சியடைந்துள்ளேன், நொறுங்கி விட்டேன்."

"என் மீது பாலியல் புகார் அளித்தப் பெண்ணின் சத்தியப்பிரமாணம், உச்ச நீதிமன்றக் குழுவுக்கு முன் அளிப்பது. அது ரகசியமாகக் காக்கப்பட வேண்டியது. எப்படி அது வெளியில் வந்தது ?"

"நான் எங்கு புகார் சொல்வது ? யார் நான் சொல்வதை காது கொடுத்துக் கேட்கிறார்கள் ?"

(இவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை எனபதை இப்போது நினைவு கூறக் கூடாது)

இப்படி அளித்த பதில், அவர் அப்பாவி என்பதை நிரூபிக்கிறது. (16.டிசம்பர்.2013)

4.வெளிப்படையானவர்:

"ஜட்ஜாக எனது ஆட்டத்தின் முடிவு இது. நான் அதை எப்படி விளையாண்டேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நேரான மட்டையால் விளையாண்டேன். நான் எப்படி விளையாண்டேன் என்பதை நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்."

(but I always tried to play with a straight bat, என்பதற்கு தவறான அர்த்தம் கொள்ளக் கூடாது)

"சட்டத்தை நான் அளவான அறிந்திருக்கின்ற வகையில், முன்பு அளிக்கப்பட்டிருக்கின்ற தீர்ப்புகள், சரியான விகிதத்தில் இல்லை"

இப்படி எல்லாம் தன்னுடைய ஓய்வு பெறும் விழாவில் வெளிப்படையாகப் பேசியவர். (2.பிப்ரவரி 2012)

5.உண்மையானவர்:

நீதியரசர் கங்குலி மீது பல தரப்பினரின் கண்டனங்கள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மனித உரிமை அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரலும் ஓங்குகிறது. பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை எதிரொலித்திருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும், பத்திரிக்கைகளும் குரல் எழுப்பியுள்ளன.

"நான் எப்படி விளையாண்டேன் என்பதை நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்." என்ற தனது வார்த்தைகளின் படி மற்றவர் தீர்ப்பிற்கு தலை வணங்கி "உண்மையானவர்" என்று நிரூபிப்பாரா என்ற வினா எழுந்துள்ளது.

"விசாரணை செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டவர் "விசாரணைக்கு உட்படுவாரா ?", "நியாயம் கேட்காமல், லைசென்ஸை ரத்து செய்தவர், தன் பதவியையும் அது போல் ராஜினாமா செய்வாரா ?" 

                             
முடிவுரை:

இப்படிப்பட்ட நீதியரசர் "முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்","தன் வினைத் தன்னைச் சுடும்" போன்ற பழமொழிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக