பிரபலமான இடுகைகள்

புதன், 29 ஜனவரி, 2014

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா ?

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்.
                

புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகத்தில் முதலில் படிச்சது. சிட்டு குருவி எல்லோரது வாழ்விலும் பின்னி பிணைந்தது. சமீப காலமாக சிட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற பரபரப்பால் இந்தப் புத்தகம் கவனம் ஈர்த்தது.

மக்கள் பிரச்சினையை விட சிட்டு பிரச்சினை முக்கியமா என ஒரு எண்ணம் ஏற்படும். இதுவும் மக்கள் பிரச்சினையே. எல்லா உயிரிகளும் இணைந்து ஒரு உயிரி வட்டம் உண்டு, அதில் ஒரு கண்ணி விடுபட்டாலும் உலக இயக்கம் பாதிக்கப்படும்.

விவசாயத்திற்கு ஊறு விளியவிக்கக் கூடிய பூச்சிகளை, புழுக்களை அழிப்பதற்கு சிட்டு போன்ற பறவைகள் அவசியம். அது குறித்த விவரங்களை கொண்டதே இந்தப் புத்தகம்.

சமீபத்திய ஆய்வில் பாம்பும் காப்பாற்றப் படவேண்டிய ஒரு ஜீவன் என்பது வெளிப்பட்டுள்ளது. வயல் வெளிகளில் நாசம் செய்யும் எலிகளை கட்டுப்படுத்த பாம்பு வாழ வேண்டும். அது போல் தான் சிட்டும்.

சிட்டுக் குருவிகளை அறிமுகப்படுத்துவதுடன், அதன் வாழ்க்கை முறை, அழிவு, கணக்கெடுப்பு, காப்பற்ற வழிமுறை என பல அத்தியாயங்களாக தொகுக்கப் பட்டுள்ளது.

சிலரது வாழ்வில் சிட்டு ஏற்படுத்திய அனுபவங்களை இணைத்திருப்பது சுவாரஸ்யம், நமக்கும் மலரும் நினைவுகள். அதன் படங்களையும் தொகுத்திருப்பது பயனுள்ளது.

பாரதியாருக்கு பிடித்தமான பறவை, அவரது கவிதையில் இடம் பிடித்தது. பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி தன் சுயசரிதைக்கு வைத்த தலைப்பு “ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி” . இப்படி பல சுவாரஸ்ய தகவல்கள்.

மேம்போக்காக இல்லாமல் சற்றே ஆய்வுகளையும் இணைத்து, அதே சமயம் இலகுவாகவும் கொடுத்திருப்பது புத்தக ஆசிரியரை பாராட்டத்தக்கது. சுற்று சூழலியல் ஆர்வம் உள்ளவர்கள் மாத்திரம் அல்ல அனைவருக்குமான புத்தகம்.

தலைப்பு : சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
வெளியீடு : தடாகம் மற்றும் பூவுலகின் நண்பர்கள்
விலை : ரூ. 70/-

# சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக