பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

1990-ல், திருச்சியில், ஆறாவது திமுக மாநில மாநாடு

ஆறாவது திமுக மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கோவையில் அய்ந்தாவது மாநில மாநாடு 1975-ல் நடைபெற்று நீண்ட வருடங்களுக்கு பிறகு 1990-ல் ஆறாவது மாநாடு. நீண்ட இடைவெளி என்பதால், கழகத் தோழர்களும் உற்சாக உச்சியில்.

1977-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியிருந்த கழகம், 1989-ல் மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தது. அந்த உற்சாகமும் கூடுதலாக. நான் கல்லூரியில் இருந்து நேராக மாநாட்டிற்கு சென்றிருந்தேன். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தயாராகியிருந்தது திருச்சி.

கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த பந்தல். முன் முகப்பு அரண்மனை போலவும், உள் முகப்பு பனையோலையால் ஆன அலங்கார வளைவு. உள்ளே திமுக இளைஞரணி நடத்திய “திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி” இடம்பெற்றது.

கண்காட்சியில் திராவிட இயக்க தலைவர்களின் படங்கள், வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. கல்லூரி மாணவனான எனக்கு அது புது அனுபவம். ஆண்டிமடம் ஒன்றியத்தில் இருந்து வந்திருந்த கழகத் தோழர்களுடன் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

ஊர்வலம் நடைபெற்ற சாலையில் அலங்கார வளைவுகள் ஒவ்வொரு ஒன்றியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. அப்போது கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் இணைந்திருந்த, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்கள் மாவட்ட செயலாளர். அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்.

கழகத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டிருந்தனர். மணல் தரையில் பெட்ஷீட் விரித்து போட்டு அமர்ந்து மாநாடு பார்த்த நினைவுகள் மறக்காது. நொறுக்குகள் கொரிக்கும் போது, பக்கத்தில் உள்ளோருக்கும் கொடுக்கும் அன்னியோன்யம். மாநாட்டிலேயே புது நட்புகள் மாநில அளவில் துளிர்க்கும்.

இரண்டு நாள் மாநாடும், சிறந்த சொற்பொழிவாளர்களால் கருத்து மழை தான். ஒவ்வொரு சொற்பொழிவாளரும் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசுவது, ஒரு புத்தகத்தை படிப்பதற்கு இணையானது. கழகத் தோழர்களால், பேச்சாளர்கள் பேச்சுக்கு உடனடியாக மதிப்பெண் போடப்படும். சிறப்புகள், தவறுகள் விவாதிக்கப்படும். அதுவே ஒரு தனி அனுபவம் தான்.

எனது தந்தை சிவசுப்ரமணியன் அவர்கள் அன்று திருச்சி மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். மறைந்த அண்ணன் க.சொ.கணேசன் அவர்கள் ஜெயங்கொண்டம் ச.ம.உறுப்பினர். அண்ணன் அரியலூர் ஆறுமுகம் அவர்கள் அரியலூர் ச.ம.உ. இவர்கள் பதினைந்து நாட்கள் திருச்சியில் தங்கி மாநாட்டு பணியாற்றினர்.

அய்யா புரவலர் அன்பிலார், மந்திரக் கோல் மைனர் நாஞ்சிலார், முரசொலி மாறன் ஆகியோர் உயிரோடிருந்து, மேடையை அலங்கரித்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் மிகச் சிறப்பான நிறைவுரை ஆற்றினார்.

( மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நான், மறைந்த மாவட்ட பிரதிநிதி அண்ணன் பூவாணிப்பட்டு கலியபெருமாள், என் தம்பி சிவக்குமார் )


                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக