பிரபலமான இடுகைகள்

சனி, 2 ஆகஸ்ட், 2014

அறிவார்ந்த செ.கு.தமிழரசன் அவர்களுக்கு...

அறிவார்ந்த செ.கு.தமிழரசன் அவர்களுக்கு

           ,

தங்களது அறிவு முதிர்ச்சியான பேட்டியை, ஜூனியன் விகடன் இதழில் கண்டு ரசித்தேன். உங்களை போன்ற அறிவார்ந்தோர் அதிமுகவில் இல்லையே என முதல்வர் கூட வருத்தப்படுவார்.

மூன்று பக்கத்திற்கு பேட்டி கொடுத்து சபாநாயகர் நடவடிக்கையை சிலாகித்தவர், அமைச்சர் வைத்தி அவர்களுடைய நல்ல தமிழ் வார்த்தை ”ஓடுகாலி”யை பாராட்டத் தவறி விட்டீர்களே என்பது தான் எனக்கு வருத்தம்.

வைத்தி கூற தயாராக இருந்ததை திமுக கேட்காமல் போய் விட்டார்கள் என்பதை குறிப்பிட்டு சொன்ன நீங்கள், ஏன் போனார்கள் ? ஏன் வெகுண்டெழுந்தார்கள் என்பது குறித்து பேசவில்லையே ?

மவுலிவாக்கம் பிரச்சினை மக்கள் பிரச்சினை இல்லையா ? அங்கே இறந்தவர்கள் எல்லாம் மாக்களா ? அவர்கள் பிரச்சினையை தானே திமுகவினர் எழுப்ப முயன்றது.

அடுத்து சட்டபேரவையின் தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். திமுகவினரை பார்த்தால் மட்டும் எரிந்து விழுபவர் நடுநிலையாளரா ? எதிகட்சியினரை பேச விடாமல் அடக்கி ஆள்பவர் பொதுவானவரா ?

எங்கள் தலைவர் சபைக்கு வராதது குறித்து பேசும் நீங்கள், அவரது சக்கர நாற்காலி வருவதற்கு பாதை அமைத்து தராத சபாவின் நடவடிக்கையையும் சற்று சீர் தூக்கிப் பாருங்கள்.

சட்டசபையில் நடுவில் செல்லும் பாதையில் ஒருவர் தான் நடந்து செல்ல இயலும். இருவர் ஒரே நேரத்தில் செல்ல இயலாது. அடுத்து அந்தப் பாதை படிக்கட்டை போல் படிப்படியானது. அதில் அவரது சக்கர நாற்காலி செல்ல இயலுமா ?

அதே போல நாற்காலியில் சென்று அமர்வதற்கு, இரண்டு வரிசைகளுக்கு இடையில் சென்று அமர்வதும் நெருக்கடியானப் பாதை. உட்கார்ந்திருப்பவர் எழுந்து வழி விட்டால் தான் மற்றவர் உள்ளே சென்று அமர முடியும். இதில் எங்கள் தலைவர் சக்கர நாற்காலி செல்லுமா ?

இதெல்லாம் உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை தான். உள்ளே நுழைந்தால் உங்கள் கண்ணுக்கு தெரிவதெல்லாம் அம்மா மாத்திரம் தானே. காதில் விழுவதெல்லாம் அம்மா மந்திரம் தானே.

இதற்கு தான் விசாலமான, புதிய சட்டமன்ற வளாகம் கட்டினோம். ஆனால் உங்கள் தலைவி மீண்டும் இந்த நெருக்கடியான இடத்திற்கே கூட்டி வந்து விட்டார். முதலில் அவரிடம் நியாயம் கேளுங்கள்.

நாங்கள் பொதுக் கூட்டம் நடத்தி மக்களை சந்திப்பதை கேலி செய்திருக்கிறீர்கள். சட்டசபையில் பேச விடாத போது, எங்களை சட்டசபைக்கு அனுப்பிய மக்களிடத்தில் செல்வது தானே நியாயம்.

உங்களுக்கென்ன கூட்டணி வெற்றி பெற்றால், அடிக்கிற காற்றில் மேலே பறப்பீர்கள், இல்லை என்றால் இருக்கிற இடம் தெரியாது. எந்த மக்களையும் சந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நீங்கள் உங்கள் பணியை பாருங்கள், எங்கள் தலைவருக்கு அறிவுரை கூறுவதை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். என்ன பணி என்று கேட்கிறீர்களா ? வள்ளுவரே சொல்லியிருக்கிறார் உங்களுக்காக ஸ்பெஷலாக…

ஊதல் இசைபாடி வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”


தங்களன்புள்ள
தங்கள் அளவுக்கு இல்லாவிட்டலும் சிறிதளவு அறிவுள்ள
சக சட்டமன்ற உறுப்பினர்
சிவசங்கர்.எஸ்.எஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக