பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மக்கள் முதல்வரும், பினாமி அரசும் (சட்டமன்ற விமர்சனம்)

04.12.2014. சட்டப்பேரவையில், கேள்வி நேரம் துவங்கியது.

அதிமுக மானாமதுரை ச.ம.உ குணசேகரன் (அதிமுக) மின்துறையில் கேள்வி கேட்டார். ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்படுமா என. அமைச்சர் நத்தம் வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.

                       

மீண்டும் குணசேகரன் “மக்கள் முதல்வர் அம்மாவை வணங்கி கேட்கிறேன்”. நத்தம் பதில் “மக்கள் முதல்வர் அம்மா ஆசியோடு நடக்கும் ஆட்சி நடவடிக்கை எடுக்கும்".
அவ்வளவு தான் ஒவ்வொரு கேள்விக்கும் அம்மா, அம்மா தான்.

காங்கிரஸ் பிரின்ஸ் கேள்விக்கு அமைச்சர் வைத்தி பதில்,”மக்களின் முதல்வர் இதயதெய்வம் அம்மாவை வணங்கி, இது குறித்த கருத்துரை ஏதும் அரசிடம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

அமைச்சர் மோகன்,” மாண்புமிகு அம்மா அரசு நடவடிக்கை எடுக்கும்”

அமைச்சர் வளர்மதி,”அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்கி பதில் அளிக்கிறேன்”

அமைச்சர் பழனியப்பன்,”மக்களின் முதல்வர் அம்மா திசை வணங்கி…”

அப்போது ஒரு கேள்வி கேட்க சரத்குமார் எழ அவர் காதில் “கடுக்கண்” டாலடித்தது. நேராக ஷூட்டிங் போவாரோ. சுரண்டை கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டவர், மக்கள் முதல்வர் குறித்து புகழவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

அமைச்சர் காமராஜ்,”அம்மாவின் பொற்பாதங்கள் வணங்கி பதில் அளிக்கிறேன்”

சித.பழனிசாமி (அதிமுக சமஉ),”அம்மா தான் நிரந்தர முதல்வர், அம்மா தான் நிரந்தர பொது செயலாளர்…” என அடுக்கிக் கொண்டே போனார். பேப்பரே படிக்க மாட்டார் போல, நிரந்தர முதல்வராம்.

ஒரு கேள்விக்கு பதில் சொல்ல எழுந்த அமைச்சர் வேலுமணி தேவையில்லாமல் கடந்த திமுக ஆட்சி குறித்து குறிப்பிடும் போது, “மைனாரிட்டி திமுக ஆட்சி” என சொல்ல, நாங்கள் “பினாமி ஆட்சி” என்று குரல் கொடுக்க, அத்தோடு ஒழுங்காக பதில் சொல்லி அமர்ந்தார்.

“வருவாய் துறை சார்பாக ஒரு ஊருக்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்படுமா ?” என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார் “ அலுவலகம் கட்ட மக்கள் முதல்வர் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும்".

இப்படி எது கேட்டாலும், மக்கள் முதல்வர் அம்மா கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், மக்கள் முதல்வர் அம்மா செய்வார்கள், மக்கள் முதல்வர் அம்மா அரசு, மக்கள் முதல்வர் அம்மாவை வணங்கி என்றால், இந்த முதல்வர் ஓ.பி.எஸ் எதற்கு ?

அதே போல சட்டசபையில் அதிகாரிகள் வரிசையில் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து “மக்கள் தலைமை செயலாளர்” ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்தார். அடுத்து “மக்கள் டி.ஜி.பி” ராமானுஜமும் அமர்ந்திருந்தார்.

இப்படி ஒரு அரசு. அலுவல்படி ஒரு முதல்வர், தலைமை செயலர். டி.ஜி.பி இருக்க, கூடுதலாக ஒரு “மக்கள் முதல்வர், அரசு ஆலோசகர்கள் என்ற பெயரில் மக்கள் தலைமை செயலாளர், மக்கள் டி.ஜி.பி” இருந்தால் அந்த அரசை எப்படி அழைக்க முடியும் ? இப்படி தான்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக