பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 9 டிசம்பர், 2014

முட்டை முறைகேடு - சட்டமன்றத்தில் எனது பேச்சு

08.12.2014 அன்று,  சட்டமன்றத்தில் "முட்டை கொள்முதலில் முறைகேடு" குறித்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கழகத்தின் சார்பாக பேச தளபதி அவர்கள் வாய்ப்பளித்தார்கள்.

                

பேச போகும் முன் கொறடா சக்கரபாணி அவர்கள்,"தளபதி அவர்கள் விவாதத்தில் பேச வேண்டும். சண்டை வராமல் பேசு" என்று அறிவுரை வழங்கினார். சபாநாயகர், முதல் வரி பேசிய உடனேயே "சிவசங்கர் சுருக்கமா பேசுங்க" என்றார். அதை தாண்டி முட்டைப் பிரச்சினையில் மக்கள் கருத்தை பதிவு செய்தேன்.

இது குறித்து முரசொலியில் வெளிவந்துள்ள செய்தி.

""சத்துணவு திட்டத்திற்கு, முட்டை கொள்முதலில் மாநில அளவில் ஒரே நிறுவனத்திடம் டெண்டர் விட்டது ஏன் ?
எடை குறைந்த – தரம் குறைந்த முட்டைகள் என பொதுமக்கள் புகார் ! பேரவையில் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு !

சத்துணவு திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் ஒரே நிறுவனத்திடம் டெண்டர் விடப்படுவது ஏன்? என்றும் எடை குறைந்த முட்டைகள், தரம் குறைந்தவைகளாக இருப்பதாக மக்கள் குறை கூறுகிறார்கள் என்றும் கழக உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் கழக உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது :

“பள்ளியிலே பயிலுகின்ற மாணவர்களுக்கு சத்துண்வோடு முட்டையினை வாரம் ஐந்து முறை வழங்குவதற்கு எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டு, வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

அப்படி வழங்கப்படுகின்ற முட்டை, கடந்த ஆட்சி காலங்களில் மாவட்டங்களில் டெண்டர் விடப்பட்டது. பல பேர் டெண்டர் எடுத்து அந்த முட்டையை சப்ளை செய்தார்கள்.

தற்போது மாநில அளவிலே டெண்டர் விடப்பட்டு, ஒரே நபருக்கு வழங்கப்பட்டு, அவரே சப்ளை செய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அது போல, வாரம் மூன்று முறை அந்த முட்டைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்ற முறை இருந்தது. ஆனால் இப்போது வாரம் ஒரு முறை அந்த முட்டைகளை முழுவதுமாக சப்ளை செய்வதால், அவற்றை தரமாக விநியோகிக்க முடியாத நிலை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.

நாள் தோறும் 60 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்ற நிலையில், ஒரு முட்டை 45கிராம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 30 முதல் 35 கிராம் எடை கொண்ட முட்டைகள் தான் சப்ளை செய்யப்படுவதாக மக்களிடத்திலே எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டே எங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த செய்தி குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் ஓராண்டு கடந்த பிறகு இன்று பத்திரிக்கைகளிலே பல எதிர்கட்சிகள் இந்தச் செய்தி குறித்து பேசுகின்ற அளவிற்கு செய்தி வந்திருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும் “
இவ்வாறு எஸ்.எஸ்.சிவசங்கர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் என வந்துள்ள செய்திகளுக்கும் நேரடியாக பதில் தராமல் வழக்கம் போல் கழக ஆட்சியை குறை கூறியே ஏறக்குறைய 20 பக்கங்களுக்கு மேல் படித்தார்.

அமைச்சரின் அர்த்தமற்ற பதிலுக்கு கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.""

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக