பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 10 மார்ச், 2015

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

 ஊர் கிளம்பினேன். கார் பயணம். வழக்கம் போல் இளையராஜா உடன் பயணித்தார். 80-கள் பாடல். அதில் ஒரு பாடல் ஆழமாக மனதை கிளறியது. “அந்தி மழை பொழிகிறது” தான் அது.

     


பழைய நினைவுகள் அலைபாய்ந்தது. ஆமாம். இந்தப் பாடல், நான் சென்னையில் பார்த்த முதல் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல். சிறு வயது நினைவுகள். அப்போது உணர்ந்ததை விட, இப்போது தான் முழுதும் உணர்ந்தேன்.

Image result for raja paarvai

கமல் நடித்த “ராஜபார்வை” திரைப்படம். அப்போது நான் ஏழாம் வகுப்பு. திருப்பெரும்புதூரில் பணியாற்றிய எனது சித்தப்பா  நெடுஞ்செழியன் அவர்களது இல்லத்திற்கு, விடுமுறைக்கு சென்றிருந்தேன். அப்போது தான் சென்னை சென்றிருந்தேன்.

வடபழனியில் உள்ள ஏவிஎம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்ததாக நினைவு. கண்பார்வை இல்லாத கமல் ஹீரோ. மாதவி ஹீரோயின். இயக்கம் சிங்கீதம் சீனிவாசராவ். கமல் இன்றும் மனதில் நிற்கிறார். பாடலை பார்த்தால் அவர் முதல்.

பாடலை கேட்டால் இசைத்த இசைஞானி இளையராஜா முதலா? எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து முதலா? என்ற கேள்வி தான் எழும். பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

அந்த வினா இன்றும் எழுந்தது. என்னால் முடிவு செய்ய முடியவில்லை. காரணம் நான் ஒரே சமயத்தில் இசைஞானிக்கும் ரசிகன், கவிப்பேரரசுக்கும் ரசிகன்.

“அந்திமழை பொழிகிறது; ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”. யார் முகம்? இசையா, கவியா?.

“நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்” இளமை துள்ளலை அன்று கவிஞரை தாண்டி யாரும் சொல்லி இருக்க முடியாது. அதே போல் அதற்கு இசை ராஜாவை தாண்டி யாரும் கட்டி இருக்க முடியாது.

“கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?; தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது” கண் பார்வை இல்லா மனிதனின் காதலையும், காதலின் சிறப்பையும் இதற்கு மேல் சிறப்பாக, மனம் தைக்க சொல்ல முடியாது. அதே போல் அந்த இசை.

“நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்” இது அக்மார்க் வைரமுத்து குறும்பு.

அந்த வயதில் தோன்றாத கற்பனை எல்லாம் இப்போது தோன்றுகிறது. மீண்டும் “ராஜபார்வை” பார்க்க வேண்டும். கமலின் நடிப்பு, மாதவி கண்கள், வயலின், ராஜாவின் இசை, வைரமுத்துவின் இளமை வரிகள், ஒருங்கிணைத்த இயக்கம்.

மீண்டும் வாய்க்குமா இதே போன்ற பாடலுக்கான வாய்ப்பு. வாய்ப்பில்லை. அந்த பாடலையே ரசிப்போம்.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
யார் ? கமலா? ராஜாவா? வைரமுத்தா?
எனக்கு என்னவோ தோன்றுகிறது.... !

# ராஜாவின் இசை ராஜபார்வை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக