பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 20 மார்ச், 2015

மாட்டுவண்டியில் சென்று தேர்தலை சந்தித்தவர்

அவர், தலைவர் கலைஞரை பார்த்து சொன்ன பதிலை கேட்டு நாங்கள் எல்லாம் திகைத்துப் போனோம். ஆனால் அவர் கேஷூவலாக சொன்னார்.


“தலைவரே, நான் 18 வருசமா ஒன்றிய செயலாளார இருந்து, மினிட் நோட்ட சரியா வச்சிருந்தப்ப எல்லாம் நீங்க கேக்கலை. இப்ப நான் மெயிண்டெயின் பண்ணாதப்ப கேட்டா, நான் எங்க போறது?”

தலைவர் சிரித்து விட்டார், தலைவர் மட்டுமல்ல, உடன் இருந்த தலைமைக் கழக நிர்வாகிகளும். 

இது 2004 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஒன்றியக் கழகமாக, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட போது நடைபெற்ற சம்பவம்.

இந்த பதிலை சொன்னவர் அன்றைய செந்துறை ஒன்றிய செயலாளர் அண்ணன் செல்லக்கண்ணு அவர்கள். 17.03.2015 அன்று மறைந்து விட்டார்.

1986-ல் உள்ளாட்சி மன்றத் தேர்தல். மூன்றாவது முறையாக முதலமைச்சராகிய எம்.ஜி.ஆர். அப்போது உள்ளாட்சியிலும் அதிமுகவே ஜெயிக்கும் என்று பேச்சு. ஆண்டிமடம் ஒன்றியத்தில் எனது தந்தை எஸ்.சிவசுப்ரமணியன் ஒன்றியப் பெருந்தலைவர் வேட்பாளர்.

செந்துறை ஒன்றியத்தில் அண்ணன் செல்லக்கண்ணு வேட்பாளர். எனது தந்தையார் சைக்கிளில் சென்று ஓட்டு கேட்டார். அண்ணன் செல்லக்கண்ணு மாட்டுவண்டியில் சென்று ஓட்டு கேட்டார். இருவரும் வெற்றி பெற்றார்கள், ஆளுங்கட்சியை எதிர்த்து, எம்.ஜி.ஆரின் “வெற்றி” பிம்பத்தை எதிர்த்து.

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கழகத்தில் ஒன்றிய செயலாளர் ஆனதே பெரிய செய்தி. அதைத் தாண்டி மக்கள் வாக்களித்து ஒன்றியப் பெருந்தலைவர் ஆனது அவரது உழைப்பின் பலன். இந்தப் பதவிக்கு முன்பாக அவர் பட்ட அவஸ்தைகளே அதிகம்.

அப்போது நான் ஜெயங்கொண்டம் நகரத்தில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து, ஆண்டிமடம் பஸ் பிடிக்கும் முன் வழக்கமாக எனது தந்தையாரின் வழக்கறிஞர் அலுவலகம் செல்வேன்.

அப்போது இரும்புலிக்குறிச்சி கிராமத்து திமுக தோழர்கள் அங்கு இருப்பார்கள். கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போடுவதற்காக வந்திருப்பார்கள். அவர்கள் ஒரு அண்டாவில் புளிசாதம் கிண்டி எடுத்து வந்திருப்பார்கள், ஹோட்டலில் சாப்பிடும் பொருளாதாரம் இல்லாததால். அந்தப் புளி சாதம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர்களின் தலைவர் அண்ணன் செல்லக்கண்ணு.

இரும்புலிக்குறிச்சியில் இருந்து, அதிமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரை எதிர்த்து, எனது தந்தையாருக்காக தேர்தல் பணியாற்றியமைக்காக, அதே ஊரிலிருந்து பணியாற்றியதால், அண்ணன் செல்லக்கண்ணு தலைமையில் 50 பேர் மீது பொய் வழக்கு தொடர்ந்தது அன்றைய அதிமுக எம்.ஜி.ஆர் அரசு. அது 1977.

ஒரு வழக்கல்ல, இரு வழக்கல்ல மொத்தம் 15 வழக்குகள். அனைத்தையும் சந்தித்து கழகத்தின் தூணாக நின்றவர் அண்ணன் செல்லக்கண்ணு. அதனால் தான், அவர் ஒன்றிய செயலாளர், ஒன்றியப் பெருந்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்.

இது மட்டுமே அவர் பெருமையல்ல. எத்தகைய சங்கடமான சூழ்நிலையாக இருந்தாலும், அங்கு அண்ணன் செல்லக்கண்ணு இருந்தால், அந்த இடம் லைவ்வாக இருக்கும். அவ்வளவு நகைச்சுவை, நக்கல் நிறைந்திருக்கும். யார், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவரது கண்ணுக்கு தப்ப முடியாது.

கூட்டணிக் கட்சிகள் டாமினேட் செய்தால் அவருக்கு பிடிக்காது, அதனை மிக அழகான வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்,”வாங்க, உங்க கட்சி இல்லாம நாங்க நடக்க முடியாது”. அவர்களே சங்கடப்படுவார்கள். பிடிக்காதவர்களை பார்க்க சொன்னால் சொல்வார்,”குட்டரோகிய கட்டிப்பிடிக்கனுமா?” அவ்வளவு வலிமையான வார்த்தைகள்.

அதே போல திருமணங்களுக்கு வாழ்த்துரை வழங்கினால் பாடல்களை "பாடித் தான்" வாழ்த்துவார். இரண்டு பாடல்கள். “நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ, இன்று முதல் நீ வேறோ, நான் வேறோ”. “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே”.

சிறு வயதில் மேடை நாடகங்களில் நடித்தவர். அதன் தாக்கம் அவரிடத்தில் இருக்கும். வெளிப்படும் வார்த்தைகள் சுற்றி இருப்போரை சிரிக்க வைக்கும். கலகலப்பாக வைத்திருப்பார். 

தலைவர் கலைஞர், தளபதி ஆகியோரின் அன்பை பெற்றவர். செய்தி கேட்டவுடன் டெல்லியில் இருந்த, அண்ணன் ஆ.ராசா துடித்துப் போனார், வர முடியவில்லை என்று. அண்ணன் கே.என்.நேரு பல்வேறு பணிகளுக்கு இடையில் வந்து அஞ்சலி செலுத்தினார். நாங்கள் நாள் முழுதும் அங்கேயே இருந்து இறுதி மரியாதை செலுத்தினோம்.

அண்ணன் செல்லக்கண்ணு அவர்களது மகன் இளஞ்செழியன். இப்போது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். ஊராட்சிமன்றத் தலைவர். என்றும் துணை நிற்போம் செழியனுக்கு .

‪#‎விண்ணோடும்‬, முகிலோடும் விளையாட சென்றாரோ அண்ணன் செல்லக்கண்ணு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக