பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 24 மார்ச், 2015

பிறந்தநாள் துவங்கியது நெகிழ்ச்சியாக

மெயில் பார்ப்பதற்காக அலைபேசியை எடுக்க கை வைத்தேன். இடம் காலியாக இருந்தது. பின் சீட்டில் தேடினேன் , அங்கும் காணோம். ராம்கோ சிமெண்ட் ஆலை அருகே வந்திருந்தோம்.

காரை நிறுத்த சொல்லி இறங்கி, கார் முழுதும் தேடினேன். அலுவலக மேசையில் இருக்கிறதா என ராஜவேலுவை பார்க்க சொன்னேன். அங்கும் இல்லை.

சற்று சிந்தித்து பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து, பின்புறம் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பிறகு கார் ஏறினேன்.

சற்றே குழப்பமாக இருந்தது. நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியாக கட் செய்து, நினைத்துப் பார்த்தேன். அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது, வழக்கம் போல் குறிப்பேடு மற்றும் இரண்டு மொபைல்களையும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஆனால் குறிப்பேடு மட்டும் காரில் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக செல்லும் போது, குறிப்பேட்டை உள்ளே வைத்து விட்டு சென்றேன்.

அப்போது தான் நினைவு வந்தது, புகைப்படம் எடுக்க ஒரு அலைப்பேசியை கையில் வைத்துக் கொண்டு, மற்றொன்றை கார் மீது வைத்தேன். ஸ்விப்ட் கார்.

எடுத்தப் புகைப்படங்களை மெயில் அனுப்பும் போது, ராமதுரை வந்தார், கூட்ட அழைப்பிதழ் கொடுக்க. அவரிடம் பேசிக் கொண்டே, காரை கதவுக்கு வெளியில் கொண்டு வரச்  சொல்லி, ஏறியது நினைவுக்கு வந்தது.

கார் மீது இருந்த மொபைல் எந்த இடத்தில் விழுந்திருக்கும் என அனுமானிக்க முடியவில்லை. வீட்டிலிருந்து இறங்கி, சாலையில் ஏறினால் சிறிது தூரத்தில் ஒரு வேகத் தடை. அடுத்து கல்லூரி அருகே ஒரு திருப்பம்.

சாலை ஏற்றம், வேகத்தடை, திருப்பம் இந்த இடங்களில் விழுந்திருக்க வாய்ப்பு உண்டு. ராஜவேலுவை மறுபடியும் அழைத்து, கல்லூரி வரை பார்க்க சொன்னோம்.

நாங்களும் காரை திருப்பினோம், வந்த வழியில் தேடுவோம் என. 4 கி.மீ தூரம் இருக்கும். அப்போது தான் சிந்தனை, அந்த அலைப்பேசியை அழைக்கலாமே .

அந்த அலைப்பேசியை அது வரை இணைய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி இருந்ததால், அதை பேச பயன்படுத்தியது இல்லை. எண் தெரியவில்லை. ரீசார்ஜ் செய்ய குறித்து வைத்திருந்ததை தேடி எடுத்தேன்.

நேரம் பறந்துக் கொண்டிருந்தது. ரிங் போனது, யாரும் எடுக்கவில்லை. இதற்குள் கல்லூரி வரை தேடிய ராஜவேலு, காணவில்லை என தகவல் கொடுத்தார். மறுநாள் பிறந்தநாள். அவ்வளவு தான்.

நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குள் கார் செந்துறை பைபாஸ் ரவுண்ட்டானாவை நெருங்கியது. மீண்டும் அழைத்து பார்ப்போமே, அழைத்தேன். யாரும் எடுத்து சிம்மை கழற்றி விடுவார்களோ என்ற குழப்பம்.

ரிங் போனது போய் கொண்டே இருந்தது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "என்ன இப்படி பண்ணிட்டீங்களே?" என்று வருத்தப்படுவார் துணைவியார்.

ஆனால்"ஹாஹா. அப்பவே சொன்னோம், இரண்டு ஸ்மார்ட் போன்லாம் உங்களுக்கு ஓவர்னு. தொலைச்சுட்டிங்களா",மகன்கள் கலாய்க்கப் போவதை நினைத்து தான் வேர்த்தது.

எப்படி தொலைந்தது என்று கேட்டால், அதற்கு என்ன சொல்வது என்று நினைத்தால், தலை வேகமாக சுற்ற ஆரம்பித்தது.

ரிங் துண்டிக்க ஒரு நொடியில் யாரோ எடுத்தார்கள். "ஹலோ, யார் பேசறீங்க". "நான் சிவசங்கர் பேசறேன். நீங்க?"."அண்ணா, நான் வினோத், மணியங்குட்டை ஏரியா. வரும் போது ராஜவேலு தேடிக்கிட்டிருந்தார்"

"நான் பைக்குல வரும் போது, ஒரு சின்னப் பையன் கீழே கிடந்தத எடுத்தான். வாங்கிப் பார்த்தேன், மொபைல். ராஜவேலு சொன்னத வச்சி, உங்களதா இருக்கும்னு நினைச்சேன். நீங்க கூப்பிட்டுட்டீங்க"

கல்லூரி தாண்டி, அடுத்த திருப்பம் தாண்டி கார் மீதே பயணித்திருக்கிறது மொபைல். அங்கு ஒரு குழியில் விழுந்து எழும் போது துள்ளி விழுந்திருக்கிறது.

நாங்கள் இருந்த இடம் வந்து கொடுத்தார். நன்றி சொன்னேன், மனம் நெகிழ்ந்து. கடமையை செய்த உணர்வுடன் விடை பெற்றார். இப்படியும் வாழ்கிறார்கள்.

சாம்சங் நோட் _3. சிங்கப்பூரில் ரூ 30,000.

பிறந்தநாள் பரிசு வினோத் கொடுத்து விட்டார். நன்றி சகோதரா.

மெயிலை திறந்து, புகைப்படத்தை இறக்கி, முகநூல் முகப்பு படமாக வைத்தேன், அதே சாம்சங்கில்.

அதற்கு ஒரு கமெண்ட், சபா திலீபன் போட்டிருந்தார்.  "வெறும்10ரூபாய் தவறினால் கூட மீளப்பெற முடியாத சமகாலத்தில் நேற்று மாலை உங்கள் கார் முன்புறத்தில் வைத்து கீழே விழுந்து மீண்டும் உங்கள் கையில் வந்து சேர்ந்த போதே இன்று உங்கள் பிறந்தநாள் என்பது தெரியாமலே நான் சொன்னேன்."இது அவரின் உழைப்பு.பிறர் பொருளுக்கு துளிகூட ஆசைப்படாமல் பிறருக்காக வாழும் நல்ல மனத்திற்கான அங்கீகாரம்.' என்றேன்.உயர்ந்த விடயங்கள் ஆயிரம் நீங்கள் அடைந்து வாழி நலங்கள் யாவும் சூழ.!!!"

இவருக்கு விஷயம் எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. இவர் பின்னூட்டம் பார்த்தப் பிறகு பகிர்ந்து கொள்ள தோன்றியது.

# ஆண்டு (பிறந்தநாள்) துவங்கியது மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக