பிரபலமான இடுகைகள்

சனி, 28 மார்ச், 2015

தோசைக்கல் மேல் குவியலாக இறால்

சிதம்பரம் போறதுன்னு முடிவெடுத்தோம். அப்போ எனக்கு தெரியாது, அவங்க போட்டிருந்த திட்டம். கிளம்பினோம் சென்னையிலிருந்து.

நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக, எங்கள் ஆசிரியர்களை அழைக்கத் தான் பயணம்.

     

சட்டமன்றம் விடுமுறையானது வசதியாகப் போனது. சென்னையிலிருந்து ஸ்ரீதர், ஆவிச்சி, நான். பாண்டியிலிருந்து ரமேஷ்பாபு, சேலத்திலிருந்து ராம்ஸ்.

மதிய உணவுக்கு புத்தூர் என்றனர். புத்தூர் ஜெயராம் ஹோட்டலை அடைந்தோம். நாங்கள் படிக்கும் போது அந்த ஹோட்டல் குறித்து அறிந்ததில்லை. காரணம் எங்கள் பல்கலைக்கழக உணவகம் அவ்வளவு சிறப்பானது.

கூரை வேயப்பட்ட முன்புறம். முன்புறமே அடுப்பு. அதன் மேல் அகன்ற தோசைக்கல். தோசைக்கல் மேல் குவியலாக இறால்.

ஒரு பெரியவர் அதனைக் கிண்டிக் கொண்டிருக்கிறார், நறுவிசாக. இன்னொரு புறம் மீன் வறுவல் நடந்துக் கொண்டிருந்தது. மீன் அழகாக நறுக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்றோம். காத்திருந்து, மேசை பிடித்தோம். செய்தித்தாள் விரித்து, அதன் மீது இலை விரித்தார்கள். சோறு கொண்டு வந்தத் தம்பி, தள்ளினார் பாதி இலைக்கு.

அடுத்து ஒரு கிண்ணம் நிறைய மீன் குழம்பு கொண்டு வந்து வைத்தார் குமார். சின்ன சுவையான மீன்கள். எடுக்க, எடுக்க வந்தது.

ஆர்டர் செய்த இறாலும், வறுவல் மீனும் வந்தது. ஒரு பிளேட் இறாலை மூன்று பேர் சாப்பிடலாம். சுவை அருமை.

மீன் வறுவல் பிரம்மாதம். "மீன் குழம்பு அப்படியே இருக்கு. சாப்பிடுங்க" குமார் வற்புறுத்தினார். கோழி குழம்பு கொண்டு வந்து வைத்தார்.

தயிர் கேட்ட ஸ்ரீதரை, அதட்டினார் குமார் அன்பாக, "ரசம் கொஞ்சமாவது சாப்பிட்டா தான் தயிர் தருவேன்". ரசம் சாப்பிட்டவர் எங்களுக்கும் பரிந்துரைத்தார். அடடா, சூப்பர்.

தயிர் கொண்டு வந்தார். வீட்டு தயிர் போல கெட்டியாக. "சாப்பிடுங்க" என்று சொல்லி கையில் ஊற்றினார். உறிஞ்சிக் குடித்தோம். சுவை . பிறகு சாப்பாட்டிலும் ஊற்றினார்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஊறுகாய் கொண்டு வந்து வைத்தார். என்ன சொல்ல, அதுவும் டாப். ஒன்றுக்கொன்று சுவையில் போட்டி.

அதை விட, உபசரிப்பு அவ்வளவு சிறப்பு, உறவினர் வீடு போல.

கைகழுவும் இடம், இருக்கை ஆகியவற்றை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

சாப்பிட்டு வெளியே வந்தோம். "காரம் ஜாஸ்தி" என்ற ஆவிச்சி கடலை மிட்டாய் தேடினார். "காரம் கம்மி தான்" என்ற ராம்ஸ் பீடா கடைக்கு நகர்ந்தார்.

பெரியவர் இன்னும் சின்சியராக இறால் வறுத்துக் கொண்டிருந்தார். குமார் தோழமையாக விடைக் கொடுத்தார்.

    

பெரியவர் தான் கடையின் முதலாளியாம். குமார் அங்கு பணிபுரியும் ஊழியர்.

# வருவிருந்து வைகலும் ஓம்புவோர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக