பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 20 மார்ச், 2015

இவர்கள் பொருட்டே இன்னும் மழை !

“எதிர்கட்சி எம்.எல்.ஏ பேசி, அதிகாரிகள் செய்யப் போகிறார்களா?. ஆளுங்கட்சியினர் மூலம் பேசிப் பாருங்கள்” என்று சொன்னேன். “ஆளுங்கட்சி சார்பில் யாரும் பேச முன் வரமாட்டேங்கிறாங்க. என்ன ஆனாலும் பரவாயில்லை. நீங்க பேசிப் பாருங்க” என்றனர்.

இவர்கள் ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள். சொந்தமாக டயர் மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள். மாலையில் தங்கள் டயர் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று, இரவு ஆற்றை அடைந்து, அவர்களே மணல் ஏற்றினால், ஊருக்கு திரும்ப வந்து சேரும் போது விடிந்து விடும்.

            

சிலர் சொந்த வீடு கட்ட மணல் அள்ளி வருபவர்கள். சிலர் சிறு விவசாயிகள், விவசாய வருமானம் போதாமல், அவ்வப் போது மணல் அள்ளி பிழைப்பவர்கள். சிலருக்கு ஜீவிதமே இது தான். ஆனால் ஒரு நாள், ஒரு நடை மணலுக்கே போய் விடும்.

இப்படி திருமுட்டம் அருகே, ஆற்றில் மணல் அள்ளிய 25 டயர் மாட்டு வண்டிகளை, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தார். டயர் வண்டியில் மணல் அள்ளினால் வழக்கு. பக்கத்து ஊரில், லாரி வைத்து மணல் அள்ளும் தனியாருக்கு அரசு பாதுகாப்பு தருகிறது. நல்ல அரசு.

வழக்கு மட்டும் போட்டால் கூட பரவாயில்லை. வருவாய் துறைப் போடும் அபராதம் தான் கொடூரமானது. ஒரு வண்டிக்கு ரூபாய் 25,000 அபராதம். டயர் வண்டியின் விலையே 10,000 தான் வரும்.

இந்த அபராதத்தைக் கட்டினால், அவர்களது ஒரு வருட உழைப்பை மீண்டும் செலவிட்டால் கூட இந்தத் தொகையை ஈடு கட்ட இயலாது. அதனால் தான் தாசில்தாரை சந்திக்க வருகிறேன் என உறுதி அளித்திருந்தேன்.

செவ்வாய் கிழமை, முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முடித்து, நேராக கார் ஏறினோம் காட்டுமன்னார்குடிக்கு. உடன் மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர், கொள்கைபரப்பு துணை செயலாளர் அண்ணன் பெருநற்கிள்ளி, ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் அண்ணன் தர்மதுரை மற்றும் கழகத் தோழர்கள்.

காட்டுமன்னார்குடியை நெருங்கும் போது அலைபேசி அழைப்பு. “அபராத கோப்பு மேல் நடவடிக்கைக்காக சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் போய் விட்டது. நாங்கள் சிதம்பரத்தில் இருக்கிறோம்” என்றனர் மாட்டுவண்டித் தோழர்கள். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், சிதம்பரம் போய் விடுவோம் என்று பயணித்தோம்.

“ஆர்.டி.ஓ எப்படி?” என்று உள்ளூர் நண்பர்களிடம் விசாரித்தேன். “டெரர். சிறுவயது. அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு இணக்கம் கிடையாது. மணல் கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருபவர். அவரது மாறுதலுக்கு உள்ளூர் ஆளுங்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்” கிடைத்தத் தகவல்கள்.

சிதம்பரம் அடைந்தோம். கைலி, பனியன், காய்ந்த தலை என நம் மாட்டுவண்டித் தோழர்கள். தைரியம் சொல்லி, சார் ஆட்சியர் உதவியாளரை அணுகினோம். சார் ஆட்சியரை சந்தித்தோம். நான், அண்ணன் சுபா, அண்ணன் கிள்ளி, அண்ணன் தர்மதுரை.

இளைஞர். அழுத்தமானவர் என்பது பார்வையிலேயே தெரிந்தது. அறிமுகப்படுத்திக் கொண்டோம். “அபராதத் தொகை அளவுக்கு கூட வண்டியின் மதிப்பு கிடையாது. அவர்கள் ஏழைகள். நீங்கள் தான் உதவிட வேண்டும்” என்றேன்.

“வழக்கு போடப்பட்டு விட்டது. இனி என்ன செய்வது?”என்றார். “அபராதத்தை குறைத்து உதவுங்கள்” என்றேன். “இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள், போனில் பேசி இருக்கலாமே?” என சற்றே ஆச்சரியத்துடன் கேட்டார். “இதற்காகவே வந்தோம். அப்போது தான் அதன் வீரியம் புரியும் என்பதால்” என்றேன்.

“சரி, அபராதத்தை குறைத்து விதிக்க ஆவண செய்கிறேன்” என்றார். “நாளையே அதை செய்தால் உதவியாக இருக்கும். ஏற்கனவே ஒரு வாரமாக பிழைப்பும் இல்லை. செலவு செய்து அலைகிறார்கள்” என்றேன். ஏற்றுக் கொண்டார். நன்றி சொல்லி வெளியே வந்தோம்.

   

தோழர்களிடம் சொன்னோம், அவர்களுக்கு அளவில்லா ஆனந்தம். கார் ஏறினோம். அண்ணன் சுபா,”இன்னும் குறைச்சு கேட்பீங்கன்னு பார்த்தேன். ஆனால் வண்டிக்காரர்கள் இதற்கே இவ்வளவு ஆனந்தப்படுவதை பார்த்தப் பின்தான், அவ்வளவு குறைத்ததே பெரிது என்பது தெரிந்தது.” என்றார். “இதுவரை அபராதத்தை குறைத்து நான் கேள்விப்பட்டதில்லை” என்றேன்.

அரியலூர் வந்தடைந்தேன். மாலை “வாட்ஸ்அப்” நோட்டிபிக்கேஷன் காட்டியது. திறந்தால் பத்திரிக்கை நண்பரின் செய்தி. “அரசு அலுவலர்கள் மாற்றம் – பட்டியல்”. முதற் பெயர், அரவிந்த், சார் ஆட்சியர், சிதம்பரம். பதறிப் போனோம்.

ஆனால், அடுத்த நாளே மாடுவண்டித் தோழர்களை வர செய்து ரூபாய் 4,000 அபராதம் விதித்து, தொகையை கட்ட செய்து, வண்டிகளை விடுவிக்க ஆணையிட்டார், மாறுதலுக்கு முன்பாக. மாட்டுவண்டித் தோழர்கள் தொடர்பு கொண்டு நன்றி 
தெரிவித்தனர்.

எங்களது நன்றிகள் சார் ஆட்சியருக்கு. ‘கடிதோச்சி மெல்ல வெறிக’, குறள் படி ஆட்சியர்.

# இவர்கள் பொருட்டே இன்னும் மழை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக