பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 20 நவம்பர், 2015

இதயத்தால் இயங்கிடுக

பில்கேட்ஸும், அம்பானியும் உட்கார்ந்த இடத்தில் பல நிறுவனங்களை நிர்வாகம் செய்யவில்லையா, முதல்வர் ஜெயலலிதாவை மாத்திரம் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் ?. இது ஒரு நண்பரின் கேள்வி.

நல்ல கேள்வி. அதிலும் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன் குறித்து அறிந்த பிறகு இந்தக் கேள்வி எழவேக் கூடாது தான். நிர்வாகத் திறன் என்பதைத் தாண்டி அவரது ஆளுமை அப்படிப் பட்டது.

தனியாக அவர் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர் குறித்தான செய்திகளே நிர்வாகத்தை வழி நடத்தி விடும். அவர் கடுமையானவர் என்ற பயமே மற்றவர்களை பணி செய்ய வைக்கும்.

யாராவது சரி இல்லை என்றால் உடனே மாற்றி விடுவார். பட்டென்று முடிவெடுப்பார்.  எதற்கும் பயப்பட மாட்டார், துணிச்சலானவர் என்பதான அந்த செய்திகள் தான் அந்த நிர்வாகத் திறனின் பின்புலம். அதில். ஒன்றும் தவறும் இல்லை.

அடுத்து அவர்கள் முன் நிறுத்துகிற முதன்மை செய்தி, இருந்த இடத்தில் இருந்து வேலை செய்ய இயலும் என்பது. அதிலும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உலகத்தின் பல நாடுகளில் இருக்கும் கிளை அலுவலகங்களை தலைமையகத்தில் இருந்து கட்டுப்படுத்த இயலும் தான்.

ஒரு முதல்வரும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பணியாற்றுவது இயலவே இயலாத காரியம் தான். இருந்த இடத்தில் இருந்து பணிகளை செயற்படுத்துவதே நிர்வாகத் திறமை.

இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இல்லை அந்த நண்பர்களோடு.

முதல்வர் சாதாரண நாட்களில் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள வேண்டும் என்று யாரும் கோரவும் இல்லை. ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு என்பதால் தான் இந்தக் கோரிக்கையும்.

பில் கேட்ஸாக இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே. அம்பானிக்கு குஜராத்தில் பெட்ரோ கேஸ் புராஜெக்ட் உள்ளது. அந்த நிறுவனத்தில் ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது எனவே கொள்வோம்.

இரண்டு காரணங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அம்பானியும் அங்கு சென்றே  தீர வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். முதல் காரணம், அந்த உயிரிழப்புக்கு ஆறுதல் கூற வேண்டிய மனிதாபிமானம், இது பொது நலம். இரண்டாவது, தன் நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பை நேரில் காண வேண்டிய சுயநலம்.

ஒரு நிறுவனத்திலேயே அந்த நிலை என்றால், நாட்டிற்கு என்ன நிலை.

நிறுவனத்தை இயந்திர கதியில் நிர்வகித்து விடலாம். ஆனால் நாட்டை இதயத்தால் நிர்வகிக்க வேண்டும்.

ஒரு மனிதன் வெளிநாட்டில் இருக்கும் போது, தன் குடும்பத்தை பணத்தால், அலைபேசி மூலம் இயக்க முடியும். ஆனால் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் பறந்து வந்தே ஆக வேண்டும்.

இழப்பு தமிழகம் என்ற குடும்பத்தில். நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு கடமை இருக்கிறது.

உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றால் கொடநாடு சென்றது போல், ஹெலிகாப்டர் பயணமாவது மேற் கொள்ளலாம்.

இவ்வளவுக்கும் அப்புறம், உங்கள் வக்காலத்தையும் தாண்டி ஜெயலலிதாவே வெள்ளத்தை பார்வையிட்டு இருக்கிறார் . அவருக்கும் வேலை இல்லையா. அப்போ இதுக்கு என்ன பதில் ?

# இதயத்தால் இயங்கிடுக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக