பிரபலமான இடுகைகள்

சனி, 23 ஜனவரி, 2016

குறிஞ்சியும் ப்ராஜெக்ட்டும்

"குறிஞ்சி நிலம் என்பது மலையும், மலை சார்ந்த நிலப்பரப்பும் ஆகும். எழுதியாச்சா?"
"விக்கிப்பீடியா பார்த்தீங்களா?"
"எனக்கு தெரியும்"
"இல்லை. விக்கிப்பீடியா எடுங்க"
"எடுத்துட்டேன்"
"மொபைல என் கிட்ட கொடுங்க". 

ஏதோ ஆய்வுக் கட்டுரைக்கான தயாரிப்புன்னு நினைச்சுடாதீங்க. நாலாம் வகுப்பு தமிழ் செய்முறைப் பயிற்சி. சிம்பிளா ப்ராஜெக்ட் ஒர்க். வெள்ளைத் தாள்ல சுத்தி கோடு போட்டு, ரூல் போட்டு பக்காவா ரெடி செஞ்சிருந்தாங்க அவர் அம்மா.

26 வருஷம் முன்னாடி எஞ்சினியரிங் அஸைன்மெண்ட் தயார் செஞ்ச ஞாபகம் வந்தது. இப்போ நாலாவதுலேயே. சோபாவில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்தார் சூர்யா. அவர் தான் நான்காம் வகுப்பு படிக்கும் அந்த வி.ஐ.பி.

மொபைலை வாங்கினார். "ஸ்கிரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கீங்களா?. இது சரியா வராது. ப்ரவுசர் ஓப்பன் பண்ணுங்க". இதுக்கு மேல தப்ப முடியுமா, ஓப்பன் பண்ணினேன். "அப்பா, ஸ்கிரீன ரொடேட் பண்ணுங்க. அப்ப தான் படிக்க ஈசியா இருக்கும்".

குறிஞ்சித் திணை முடிந்து அடுத்த திணை போவதற்குள் மூச்சு வாங்கி விட்டது, எனக்கு. "அடுத்து முல்லைப்பா", என்றேன். "இல்லை. நான் நெய்தல் டைட்டில் எழுதிட்டேன். அத எடுத்துக் கொடுங்க",என்றார் அழுத்தமாக. அதை எடுத்துக் கொடுக்க, எழுத ஆரம்பித்தார்.

எதிர் சோபாவில், போர்க்கால அடிப்படையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர் மூத்த மகனும், இணையரும். அங்க இவருக்கு சயின்ஸ் ப்ராஜெக்ட்க்கு தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.

இணையர்,"ஸ்டிக்கர் ஒட்டியாச்சா?" என்றார். "ஜெயலலிதா ஸ்டிக்கரா?"என்றேன். மூத்த மகன் சரண், " நானும் நினைச்சேன்" என்றார்.  பதினோராம் வகுப்பு மாணவன் வரை புரட்சித்தலைவியின் புகழ்.

நில வகையின் படம் கொண்ட ஸ்டிக்கரைக் கொடுத்தார் இணையர். சரண் கத்தரிகோல் கொண்டு நறுக்கினார். எழுதிய தாளை அண்ணனிடம் கொடுத்தார் சூர்யா, ஸ்டிக்கர் ஒட்ட. "குறிஞ்சிக்கு அடுத்து முல்லை தானே. நெய்தல எழுதியிருக்க?". "எனக்கு அப்படி தான்".

ஒரு வழியாக, மூன்றாவதாக மருதம் எழுத முடிவானது. இப்போதும் விக்கிப்பீடியா வேண்டும் என மொபைலை வாங்கிக் கொண்டார். அந்திமழை இதழ் ஆசிரியர் கூட நான் எழுதறத அப்படியே போட்டுடறாரு.  நாலாம் கிளாஸ் கிட்ட முடியல.

அசந்துப் போன என்னைப் பார்த்து இணையர் ," அப்பப்போ தப்பிச்சிக்கறீங்க இல்ல. என் கஷ்டம் இப்ப புரியுதா?" என்றுக் கேட்டார். "அந்த சபாநாயகரே பரவாயில்லை" என்றேன். கண்ணாடியை தூக்கி விட்டுக் கொண்டு ஒரு பார்வை பார்த்தார் சூர்யா.

# சபாநாயகரின் வானளாவிய அதிகாரம் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக