பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 18 மார்ச், 2016

மாதா, பிதா, குரு...

"எங்க மாமா  இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர். அவரே தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர், நிருபர், விளம்பர மேலாளர், டிஸ்ட்ரிப்யூட்டர், டெலிவரி பாய்" என சொல்லிய போது அரங்கில் இருந்தோர் கையொலி எழுப்பினர். சிலர் சிரித்தனர். சிலர் மகிழ்ந்தனர். சிலர் வியந்தனர். நான் நெகிழ்ந்தேன்.

அது "சென்னைக் குரல்" பத்திரிக்கையின் 20ம் ஆண்டு நிறைவு விழா. நிறைவு விழா என்பதை விட, 21ம் ஆண்டின் துவக்க விழா என சொல்லலாம் என்று சிலர் செண்டிமெண்ட்டாக சொன்னார்கள். ஆனால் அதற்கும் அண்ணன் கார்த்திகை நிலவன் புன்னகைத்தவாறு நின்றார். அவர் தான் அந்த ஆசிரியர் கம் டெலிவரிபாய்.

சென்னை குரல் பத்திரிக்கை என்றவுடன் கூடுதல் சிந்தனை வந்துவிடலாகாது. கழகத் தோழர்களுக்காக இயங்கும் சிறுபத்திரிக்கை. ஆனால் சிறுபத்திரிக்கை என்ற எண்ணம் இல்லாமல் அதற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டிருக்கிறார் அண்ணன் நிலவன்.

அதனை அந்த விழாவில் வைக்கப் பெற்றிருந்த கண்காட்சியை கண்டு உணர்ந்தேன். துவக்கத்தில் இருந்து இது வரையிலான இதழ்களை பார்வைக்கு வைத்திருந்தார். "ஆரம்பத்துல சினிமா பாட்டுப்புத்தகம் சைஸ்ல இருக்கு பாருங்க" என மும்பை ஆறுமுகப் பாண்டியன் அண்ணாச்சி காட்டினார். அப்போதே எம்.ஜி.ஆரை கார்ட்டூனில் கலாய்த்திருந்தார் அண்ணன் நிலவன்.

விழாவிற்கு ஒரு கல்லூரிப் பெண் வரவேற்புரையாற்றினார். துவக்கவுரையாக ஒருவர் பின்னி எடுத்தார். வட்ட செயலாளர் அதியமான். அப்துல்லா அண்ணன் என்னைப் பார்த்து சிரித்தார். "கழகத்தின் வட்ட செயலாளரும் உரையில் கலக்குவார்" என கமெண்ட் பறந்தது. .

அண்ணன் எம்.எம்.அப்துல்லா, கீரை தமிழ்ராஜா, மாம்பலம் சந்திரசேகர், பத்திரிக்கையாளர் யுவகிருஷ்ணா, புதுகை மா.செ அண்ணன் அரசு என பலரும் வாழ்த்த, நக்கீரன் இணையாசிரியர் அண்ணன் கோவி.லெனின் மாநாட்டு உரை போல் பிரித்து எடுத்தார். உண்மையில், அழுத்தமான கருத்துகள் நிரம்பிய உரை அது.

அந்த "சென்னைக் குரல்" இதழை அனைவருக்கும் இலவசமாக தான் வழங்குவார் அண்ணன் கார்த்திகை. அதே போல விழாவிற்கு வந்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவும் வழங்கினார். இதற்கான செலவிற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என பின்னர் தான் யோசிக்கத் தோன்றியது.

இன்னும் யோசிக்க பல விஷயங்களை வைத்திருந்தார் அண்ணன். 20 வருடங்கள் தொய்வில்லாமல் ஒரு பத்திரிகை நடத்துவது சிரமம். அதுவும் எதிர்பார்ப்பில்லாமல், வருமான நோக்கமில்லாமல், ந்ஒரு இயக்கம் சார்ந்து நடத்துவது மிக சிரமம். அதைவிட சிரமத்தை அவர் சுமக்கிறார் என்பதை அடுத்த நிகழ்வு உணர்த்தியது.

அரசு அண்ணன் "பேமிலி போட்டோ. எல்லோரையும் கூப்பிடுங்க", என்றார். வரவேற்புரையாற்றிய அறிவுச்செல்வி மேடைக்கு வந்தார். மூத்த மகள். எம்.சி.ஏ படிக்கிறார். அடுத்து வந்தப் பெண் தான் எங்களுக்கெல்லாம் டீ, பிஸ்கட் கொடுத்தவர். அறிவுக்கரசி, எட்டாம் வகுப்பு படிக்கிறார். அடுத்து அறிவன்பன். இவருக்கு சிறப்பு கவனம் செலுத்த அண்ணன் பெரும் பகுதி நேரம் செலவிடுகிறார். இவர்கள் அனைவரும் குடும்ப நிகழ்வு போல் அதுவரைப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

தன்னுடைய வரைகலைத் தொழிலை வைத்துக் கொண்டு, இவர்களை படிக்க வைத்து, குடும்பத்தை நடத்தி, இந்த இதழையும் நடத்தி உண்மையில் மிகப் பெரியப் பணி. காரணம், அண்ணன் கார்த்திகை நிலவன் துணைவியார் மறைந்து எட்டாண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இவர் தான் அவர்களுக்கு தாய், தந்தை, தோழன். சென்னைக் குரலுக்கும் ஆசிரியர்.

# மாதா, பிதா, குரு. அண்ணன் கார்த்திகை நிலவன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக