பிரபலமான இடுகைகள்

சனி, 26 நவம்பர், 2016

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு செவ்வணக்கம்

ஃபிடல் காஸ்ட்ரோ. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரு புரட்சியாளர். அவரை இழந்திருக்கிறோம். தான் வாழும் காலத்திலேயே, தான் கண்ட கனவுகளை நனவாக்கிப் பார்த்த புரட்சியாளர். தன் தாய்நாட்டு விடுதலைக்கு தலைமையேற்று போராடி வெற்றி கண்ட புரட்சியாளர். விடுதலை அடைந்த தன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய புரட்சியாளர் மறைந்திருக்கிறார்.

எங்கோ பிறந்த மனிதர் ஃபிடல் இந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் ஃபிடல் குறித்து பலமுறை தன் உடன்பிறப்பு கடிதங்களில் எழுதி ஏற்படுத்திய தாக்கம். அதன் தொடர்ச்சியாக அவர் குறித்து வாசித்தவை.

"உயிரோடிருக்கும்  உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின்  பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல;  என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு;  அவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ என்றேன்." இது தலைவர் கலைஞரின் கவிதை.

அவரை புரட்சியாளர் என்று அழுத்தமாகக் குறிப்பிடக் காரணம், கியூபாவை புரட்சி மூலமாக விடுவித்தார் என்பதற்காக மாத்திரம் அல்ல. அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் புரட்சியின் அடையாளமாக இருந்தது. வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், அந்த வாழ்வோடு நிறுத்த விரும்பவில்லை.  கல்வி பயின்றார், ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம். மனம் கம்யூனிஸத்தை நாடி சென்றது. அங்கு தான் புரட்சியின் விதை விழுந்தது.

பொலிவியா மற்றும் கொலம்பிய நாடுகளில் வலதுசாரி அரசுகளை எதிர்த்து நடைபெற்ற புரட்சிப் போராட்டங்களில் பாடம் பயின்றார். அப்போதைய கியூப அதிபர் படிஸ்டாவின் அரசாட்சிக்கு எதிராக குரல் கொடுத்தார். 1953ல் படிஸ்டா அரசிற்கு எதிராக ஒரு தாக்குதலை மேற்கொண்டார். அதற்கு முன்பாக தன் தோழர்களிடம் ஒரு உரை நிகழ்த்தினார்.

"இன்னும் சில மணி நேரத்தில் நாம் வெற்றி பெறலாம் அல்லது வீழ்த்தப்படலாம். ஆனால் அதைத் தாண்டி இந்த இயக்கம் வெற்றி பெறும். நாம் வெற்றி பெற்றால் கனவுகள் நிறைவேறும். தோல்வி அடைந்தால், நம் போராட்டம் புதியவர்களை எழுச்சியுற செய்யும், கியூபாவிற்காக உயிர் துறக்க" . இது 27 வயது இளைஞனாக நிகழ்த்திய உரை.  இது தான் பிடல்காஸ்ட்ரோ ஒரு புரட்சித் தலைவனாக உருவாவதை வெளிப் படுத்திய தருணமாக இருக்கும்.

தாக்குதல் ஒரு சிறு பிசகால் தோல்வி அடைந்தது. பலர் உயிரிழந்தனர். அப்போது ஃபிடல் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரே வழக்கறிஞராக வாதாடினார். இந்த வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் நான்கு மணி நேரம் ஆற்றிய உரை புகழ்வாய்ந்த ஒன்று. அப்போது தான் அந்த பிரசித்தி பெற்ற வாக்கியத்தை உச்சரித்தார்,"வரலாறு என்னை விடுதலை செய்யும்".

ஒரு வருட சிறை வாசத்திற்கு பிறகு, மெக்சிகோ சென்றார். மீண்டும் படை திரட்டினார். படையை கொரில்லா தாக்குதலுக்கு பயிற்சி பெற வைத்தார். அந்த நேரத்தில் தான் புரட்சியின் அடையாளமாக இன்றைக்கும் பார்க்கப்படுகின்ற, கம்யூனிஸம் அறியாத இளைஞர்களின் டி-சர்ட்டிலும் இடம் பிடித்துள்ள "சேகுவேரா" வும் "காஸ்ட்ரோ"வும் இணைந்தனர். இவர்களோடு காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ இருந்தார். காஸ்ட்ரோ, கியூபாவில் இருந்த மற்ற போராளிகளோடு கை கோர்த்தார்.

1959ல் படிஸ்டா அரசாங்கம்,  ஃபிடல்காஸ்ட்ரோ தலைமையில் துரத்தப்பட்டது. அரசு மற்றும் ராணுவத்தின் தலைவராக, பிரதமராக பதவியேற்றார் ஃபிடல். 49 ஆண்டுகள் பிரதமராக, அதிபராக பணியாற்றி வளர்ச்சிப் பெற வைத்தார் கியூபாவை. நிலசீர்திருத்தம், கல்வி, மருத்துவம், சமூகப் பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தான் எண்ணிய இலக்கை எட்டினார். புரட்சி தொடர்ந்தது.

உலக வரைபடத்தில் கியூபா, அமெரிக்காவின் அருகே ஒரு தூசு போல இருக்கும். தூசு தான், ஆனால் அமெரிக்காவின் கண்ணில் விழுந்த தூசாக திகழ்ந்தது, காஸ்ட்ரோவால். கியூபாவின் பரப்பளவு 1 லட்சம் சதுர கிலோமீட்டர். அமெரிக்காவின் பரப்பளவு 98 லட்சம் சதுர கிலோமீட்டர், கியூபா கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் தான். கியூபாவின் மக்கள்தொகை 1கோடியே 12 லட்சம். அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி. உருவு கண்டு எள்ள நினைத்த அமெரிக்காவின் ஆட்டம் ஃபிடலிடம் பலிக்கவில்லை.

உலகத்தையே மிரட்டிய அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபிடலிடம் தொடர்ந்து தோற்று போனது. அறுநூறுக்கும் மேற்பட்ட முறை அமெரிக்காவின் உளவு நிறுவனம் சி.ஐ.ஏ, ஃபிடலை கொல்ல முயற்சி செய்து தோற்றுப் போனது. கியூபா மீது பொருளாதாரத் தடை, தாக்குதல் என அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெற வில்லை. இதை எல்லாம் தாண்டி தான் ஃபிடல் பணியாற்றினார், கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் உலக நாடுகளின் பார்வையில் ஃபிடல் புரட்சியாளராக மிளிர்ந்தார்.

ஃபிடல் குறித்து எழுதினால், ஒரு புத்தகமாக தொகுக்கலாம். இன்றைக்கும் கம்யூனிசத்திற்க்கு நம்பிக்கை அளிக்கிற அடையாளமாக, புரட்சிக்கு தலைவனாக திகழ்ந்த காஸ்ட்ரோ தான், ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமும். ஃபிடலின் எண்ணங்கள் தான் இனி வரும் காலத்தில், சோஷலிசவாதிகளை வழி நடத்தக் கூடியது.

இவற்றை விட ஃபிடலின் தோற்றம் அனைவரையும் கவரக் கூடியது. அந்த ராணுவ உடையும், மிடுக்கும், கூர்மையான பார்வையும், துடிப்பான உடல் மொழியும் என்றும் நினைவில் இருக்கும். இதைத் தாண்டி உலகப் புகழ்பெற்ற "கியூப சுருட்டை" ஃபிடல் பிடிக்கும் பாங்குக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டாம்.

ஃபிடலின் புகழ் பெற்ற, "வரலாறு என்னை விடுதலை செய்யும்" வாக்கியம் பொய்த்துப் போனது, ஆமாம் பொய்த்தேப் போனது. "வரலாறு அவரை கைது செய்து விட்டது நிரந்தரமாக, 'புரட்சித்தலைவன்' என".

# புரட்சியாளர் ஃபிடலுக்கு செவ்வணக்கம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக