பிரபலமான இடுகைகள்

புதன், 31 மே, 2017

செகரட்டரி பன்னீர் !

அவரவர் எச்சத்தாற் காணப்படும். ஒருவரது வாழ்வு எப்படி இருந்தது என்பது அவர் விட்டு செல்லும் புகழ் மூலம் அறியப்படும். இது வள்ளுவரின் வாக்கு.

குறள் வழி பார்த்தால், 'செகரட்டரி' வாழ்க்கை மற்றோருக்கு பயன்பட்டது என்பது இன்று புலப்பட்டது. அரியலூரில் திரும்பியப் பக்கம் எல்லாம் செகரட்டரிக்கான கண்ணீர் அஞ்சலி பதாகைகள், சுவரொட்டிகள் தான். தொழிலதிபர்களும் வைத்திருந்தனர், ஆட்டோ ஓட்டுனர்களும்  வைத்திருந்தனர். சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களது வருத்தமும் வெளிப்பட்டது.

பன்னீர்செல்வம் என்பதை விட  'செகரட்டரி' என்றே எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அவர். அதனால் செகரட்டரி என்று பதவியின் பொருட்டு அலுவலகத்தில் அழைக்கப்பட்டவர், மக்களாலும் அழைக்கப்பட ஆரம்பித்தார். அரியலூரில் பல சங்கங்கள் உண்டு, பல செயலாளர்களும் உண்டு. ஆனால் இவரே 'செகரட்டரி'.

அரியலூர் மாவட்டத்தில் பெரிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், அரியலூர் நகரில் இருப்பது தான். சுற்றிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கான சங்கம் இது. ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம். ஒரு காலத்தில் திருச்சி அரசு பால் பண்ணைக்கு பெரும் பகுதி பாலை அனுப்பியது இந்த சங்கம் தான்.

ஆயிரக்கணக்கான குடும்பத்தின் வருமானத்திற்கு முதுகெலும்பாக திகழ்வது இந்த சங்கம். இந்த சங்கத்தில் எழுத்தராகப் பணிக்கு சேர்ந்தவர் தான் அண்ணன் பன்னீர்செல்வம். படிப்படியாக உயர்ந்து செயலாளர் ஆனார். சங்கப் பணியாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார். காரணம் சிறுவயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்.

பணியாளர்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தவர், அதற்கான அமைப்புகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்கான கோரிக்கைகளுக்காக அரசுடன் போராடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது என எப்போதும் பரபரப்பாக இருப்பார்.

சங்கப் பணிகள் இருந்தாலும், கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார். நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட அந்த சங்கத்தை நிர்வகிப்பது  பெரும் பணி.  பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் எல்லோரது அன்பையும் ஒருங்கே பெற்றிருந்தார். இப்படி ஒரே நேரத்தில் எல்லோரது அன்பையும் பெறுவது சர்க்கஸ் மாதிரி.

அதில் கைதேர்ந்தவர் அண்ணன் செகரட்டரி பன்னீர். இன்னொரு பக்கம் கட்சிப் பணியும் தொடர்ந்தார். அரசியல் ரீதியான குறுக்கீடுகள் வந்தாலும் அத்தனையையும் சமாளித்து விடுவார். பால்பண்ணைப் பணியில் முத்திரைப் பதித்து ஓய்வுப் பெற்றார். பிறகு பொதுவாழ்வில் ஈடுபட்டார். 2011 சட்டமன்றத் தேரதலில், அரியலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். கணிசமான வாக்குகள் பெற்றார்.

அவரது பணியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பான்மையினரின் அபிமானத்தோடு பணியாற்றினார். அதன் பலன் இன்று வெளிப்பட்டது, மறைவிற்கான அஞ்சலியில்.

அஞ்சலி செலுத்த வந்தவர்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ம.க கம்யூனிஸ்ட், வி.சி.க என அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காலை முதல் மாலை வரை கிராமத்து மக்கள், நகரத்தை சேர்ந்தவர்கள் என சாரி, சாரியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமும் அவரது பணியின் சிறப்பை வெளிப்படுத்தியது. ஒரு மனிதர் இவ்வளவு பேரிடம் பழகி, அவர்களது அன்பை பெற முடியுமா என எண்ண வைத்தது.

# பன்னீர் இயற்கையில் கரைந்தாலும் மணக்கிறார் !

செகரட்டரி பன்னீர் !

அவரவர் எச்சத்தாற் காணப்படும். ஒருவரது வாழ்வு எப்படி இருந்தது என்பது அவர் விட்டு செல்லும் புகழ் மூலம் அறியப்படும். இது வள்ளுவரின் வாக்கு.

குறள் வழி பார்த்தால், 'செகரட்டரி' வாழ்க்கை மற்றோருக்கு பயன்பட்டது என்பது இன்று புலப்பட்டது. அரியலூரில் திரும்பியப் பக்கம் எல்லாம் செகரட்டரிக்கான கண்ணீர் அஞ்சலி பதாகைகள், சுவரொட்டிகள் தான். தொழிலதிபர்களும் வைத்திருந்தனர், ஆட்டோ ஓட்டுனர்களும்  வைத்திருந்தனர். சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களது வருத்தமும் வெளிப்பட்டது.

பன்னீர்செல்வம் என்பதை விட  'செகரட்டரி' என்றே எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அவர். அதனால் செகரட்டரி என்று பதவியின் பொருட்டு அலுவலகத்தில் அழைக்கப்பட்டவர், மக்களாலும் அழைக்கப்பட ஆரம்பித்தார். அரியலூரில் பல சங்கங்கள் உண்டு, பல செயலாளர்களும் உண்டு. ஆனால் இவரே 'செகரட்டரி'.

அரியலூர் மாவட்டத்தில் பெரிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், அரியலூர் நகரில் இருப்பது தான். சுற்றிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கான சங்கம் இது. ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம். ஒரு காலத்தில் திருச்சி அரசு பால் பண்ணைக்கு பெரும் பகுதி பாலை அனுப்பியது இந்த சங்கம் தான்.

ஆயிரக்கணக்கான குடும்பத்தின் வருமானத்திற்கு முதுகெலும்பாக திகழ்வது இந்த சங்கம். இந்த சங்கத்தில் எழுத்தராகப் பணிக்கு சேர்ந்தவர் தான் அண்ணன் பன்னீர்செல்வம். படிப்படியாக உயர்ந்து செயலாளர் ஆனார். சங்கப் பணியாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார். காரணம் சிறுவயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்.

பணியாளர்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தவர், அதற்கான அமைப்புகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்கான கோரிக்கைகளுக்காக அரசுடன் போராடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது என எப்போதும் பரபரப்பாக இருப்பார்.

சங்கப் பணிகள் இருந்தாலும், கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார். நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட அந்த சங்கத்தை நிர்வகிப்பது  பெரும் பணி.  பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் எல்லோரது அன்பையும் ஒருங்கே பெற்றிருந்தார். இப்படி ஒரே நேரத்தில் எல்லோரது அன்பையும் பெறுவது சர்க்கஸ் மாதிரி.

அதில் கைதேர்ந்தவர் அண்ணன் செகரட்டரி பன்னீர். இன்னொரு பக்கம் கட்சிப் பணியும் தொடர்ந்தார். அரசியல் ரீதியான குறுக்கீடுகள் வந்தாலும் அத்தனையையும் சமாளித்து விடுவார். பால்பண்ணைப் பணியில் முத்திரைப் பதித்து ஓய்வுப் பெற்றார். பிறகு பொதுவாழ்வில் ஈடுபட்டார். 2011 சட்டமன்றத் தேரதலில், அரியலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். கணிசமான வாக்குகள் பெற்றார்.

அவரது பணியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பான்மையினரின் அபிமானத்தோடு பணியாற்றினார். அதன் பலன் இன்று வெளிப்பட்டது, மறைவிற்கான அஞ்சலியில்.

அஞ்சலி செலுத்த வந்தவர்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ம.க கம்யூனிஸ்ட், வி.சி.க என அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காலை முதல் மாலை வரை கிராமத்து மக்கள், நகரத்தை சேர்ந்தவர்கள் என சாரி, சாரியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமும் அவரது பணியின் சிறப்பை வெளிப்படுத்தியது. ஒரு மனிதர் இவ்வளவு பேரிடம் பழகி, அவர்களது அன்பை பெற முடியுமா என எண்ண வைத்தது.

# பன்னீர் இயற்கையில் கரைந்தாலும் மணக்கிறார் !

திங்கள், 29 மே, 2017

ஹு ஆர் யூ பிரைம் மினிஸ்டர்

"ரெண்டு பரோட்டா, ஒரு ஃபீப் ப்ரை". தமிழில் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் ஆனாலும் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் தானே. சிறு கடை தான். உள்புறம் சின்ன பெஞ்ச், சின்ன மேசைகள் வரிசையாக. குண்டு பல்ப் மஞ்சளாக ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது. அது 2002. கிட்டத்தட்ட புரிந்திருக்கும். ஆமாம் "கடவுளின் தேசம்" கேரளா தான்.

அது தொழிற்முனைவராக இருந்த காலம்.  கேரளாவில்  ஜேசிபி வாடகைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அடிக்கடி கேரளா சென்று வரும் வாய்ப்பு. போகும் போதெல்லாம் கேரள உணவை சுவைக்க கிடைக்கும் வாய்ப்பை விடுவதில்லை. காலையில் கிடைக்கும் ஆப்பம் - கொண்டக்கடலை, குழாப்புட்டு - நேந்திரம் வாழைப்பழம் எனத் துவங்கி, மதியம் மீன் பொளிச்சது, மீன் வறுத்தது என எதையும் விடவில்லை.

இப்படி இருந்தாலும் மாட்டுக்கறி "ஃபீப்" சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த போது விடவில்லை. காரணம் கமல், அவர் வசனம்.  "வானத்தில பறக்கிற விமானத்தையும், கடல்ல மிதக்கிற கப்பலையும் தவிர ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாம் சாப்பிடுவேன்". அப்போ தான் கணக்கு பார்த்தேன், நாம எதெல்லாம் சாப்பிடிருக்கோம். விடுபட்டதில் முக்கியமானது மாட்டுக்கறி.

அந்த மாட்டுக்கறி சாப்பிடும் வாய்ப்பை தான் அடூரில் பெற்றேன். பரோட்டா கேரளாவில் தான் சாப்பிட வேண்டும். பொன் முறுவலா, அடடா. அதற்கு, மாட்டுக்கறி அத்தனை பிரமாதமானத் துணை. அப்போது முதன்முறை சாப்பிட்டவன், அதற்கு பிறகு கேரளா செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விடுவதில்லை. வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு சுவையில் ஃபீப் கிடைத்திடும்.

பிறகு அரியலூரில் ஒரு நாள் செந்துறை பைபாஸ் அருகில் ஃபீப் பிரியாணி பார்த்தேன், விடவில்லை. ரயில்வே கேட் அருகேயும் கிடைத்தது. அரியலூருக்கான சுவையோடு கிடைத்தது. கேரள சுவை இல்லாவிட்டாலும், இது ஒரு சுவை தான். சென்னையில் ஃபீப் கிடைக்கிறது.  கிடைத்தாலும், கேரள சுவைக்கு ஈடாகாது. ஃபீப் கிட்டத்தட்ட கேரளாவின் தேசிய உணவு .

இன்னொரு பக்கம் ஃபீப் என்பது தமிழகத்தில் பரவலாகக் கிடைக்காத உணவு என்று ஒருத் தோற்றம். ஆனால் நகரங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே கிடைக்கிறது.  இப்போது ஃபீப் பிரியாணி புகழ்பெற்ற உணவாகி விட்டது.  அது ஏதோ இஸ்லாமியர்களும், ஒடுக்கப்பட்டோரும் நாடுகிற உணவு என ஊடகங்கள் கட்டமைக்க முயலுகின்றன. அது தவறு, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவாகி விட்டது மாட்டுக்கறி.

என் துணைவியார் அசைவம் சாப்பிடுகிறவர் தான்.  ஆனால், திருமணத்திற்கு முன், வாரம் மூன்று நாட்கள் விரதம் இருந்தவர். என்னால் அவரது விரதங்கள் கைவிட்டுப்  போயின. ஆயினும் மாட்டுக்கறி என்றால் வாய்ப்பே இல்லை என்று சொல்லக் கூடியவர் . அவருக்கு தெரியாமல் தான் கேரள சுவை ஃபீப். பிறகு அவரிடத்தில் சொல்லி விட்டேன்.

மருத்துவர் என்பதால், ஒரு பயிற்சிக்காக துணைவியார் கொச்சின் செல்ல வேண்டி வந்தது. அவருக்கு துணை என்ற பெயரில்  உடன் மகன்களோடு நானும் பயணித்தேன். தங்கும் அறை ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை உணவு, அறை வாடகையில் சேர்ந்தது. பஃபே சிஸ்டம். ஆப்பம் கிடைத்தது. காலையிலேயே அசைவமும் இருந்தது. இரண்டு பாத்திரங்கள் இருந்தன.

ஒன்று சிக்கன் ஸ்டூ. இன்னொன்று ஃபீப் மசாலா. துணைவியாரும் மகன்களும் ஆப்பமும் சிக்கனும் சாப்பிட, நான் ஆப்பமும் ஃபீபும் சாப்பிட்டேன். மூன்று நட்சத்திர விடுதியில் கிடைத்ததால் அவர் ஒன்றும் எதிர்ப்பு சொல்லவில்லை. "எப்படி இருக்கிறது?" என்றுக் கேட்டார். "செம ஃடேஸ்ட்" என்றேன். "சரி. எஞ்சாய் பண்ணுங்க" என்று சொன்னார்.

# ஹோம் மினிஸ்டரே அனுமதித்த பிறகு, நீ யார் மேன் ப்ரைம் மினிஸ்டர் ?



புதன், 24 மே, 2017

மறக்க இயலாது இராமதாசனை

உட்கோட்டை என்று ஊர் பெயர் சொன்னால், ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக தோழர்களுக்கு அண்ணன் இராமதாசன் பெயர் தான் நினைவு வரும். அந்த அளவிற்கு சிறப்பான கழகத் தொண்டர். மூத்த நிர்வாகி. முப்பது ஆண்டுகள் மாவட்டப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். மாவட்டப் பிரதிநிதி என்பது மாவட்ட செயலாளரை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை உள்ள பதவி. ஒரு மாவட்டக் கழகத்தை நிர்வகிக்கும் பதவி மாவட்ட செயலாளர்.

அண்ணன் ராமதாசன் 25 வயதுகளிலேயே மாவட்டப் பிரதிநிதியாகி விட்டார். அவர் வாக்களித்தத் தேர்தலில் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்கள். தலைவர் கலைஞரின் அணுக்கத் தோழரும், கழக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அன்பிலாரோடு பணியாற்றினார் ராமதாசன். அப்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்.

உறவினர் இல்லத்திற்கு ஆண்டிமடம் வருவார். ஆனால் அங்கு செல்லும் முன், அப்போதைய மாவட்ட துணை செயலாளரான என் தந்தை சிவசுப்ரமணியன் அவர்களை முதலில் சந்திப்பார். கழகம் தான் முதலில். அப்போது நான் பள்ளி மாணவன். அன்றிலிருந்து அவரைப் பார்க்கிறேன். எப்போதும் திமுக கரை வேட்டி, கையில் ஒரு கைப்பை, ஒரு திமுக கரை போட்ட துண்டு என இருப்பார். கடைசி வரை அப்படித் தான்.

அதிர்ந்து பேசமாட்டார். அவர் உடல் மொழியில் பணிவு நிறைந்திருக்கும். குழைந்த சிரிப்போடு அன்பானப் பேச்சு தான் எப்போதும். சைக்கிள், லாரி, பஸ் என பயணித்து கழகப் பணியாற்றியவர்.

எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர், உழைப்பால் முன்னேறியவர். நேரத்தின் பெரும்பகுதியை கழக வளர்ச்சிக்கு செலவிடுவார். 1978ல் திமுக எதிர்கட்சியான சமயத்தில் தலைவர் கலைஞரை உட்கோட்டை கிராமத்திற்கு அழைத்து வந்து பொதுக் கூட்டம் நடத்தினார். பின்னர் தளபதி அவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியவர். கழக முண்ணனித் தலைவர்கள் பலரையும் ஊருக்கு அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தியவர்.

கழகத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர் துரோகம் இழைத்து வெளியேறிய நேரத்திலும் எஃகு தூணாக நின்றவர் இராமதாசன். பெரும்பான்மை சமூக எதிர்ப்புகளுக்கு பயப்படாமல் துணிந்து கழகப் பணியாற்றியவர். தேர்தலில் வாக்களித்தால் பிரச்சினை வரும் என்ற சூழலிலும் 1989 தேர்தலில் அண்ணன் க.சொ.கணேசன் அவர்களுக்கு கடுமையாக தேர்தல் பணியாற்றியவர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் மனம் கவர்ந்த சிஷ்யர். அவர் ஆலோசனை பெற்று தான் செயல்படுவார். அவர் தலைமையில் தான் அண்ணன் இராமதாசன் இல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் அவர் அமைச்சராக இருக்கும் போது ஒரு நாளும் உதவி நாடி செல்ல மாட்டார். அண்ணன் இராமதாசனுக்கு மூத்த அமைச்சர்கள் பலரோடு நெருங்கியப் பழக்கம். ஆனால் சுயநலத்திற்காக அவர்களை அணுக மாட்டார்.

கடந்த மார்ச் மாதம் தளபதி அவர்களுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி உட்கோட்டையில். அப்போது தான் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தார் அண்ணன் இராமதாசன். வீட்டிற்கு சென்று சந்தித்தோம். தன் உடல் நிலையை விட கழகப் பணிகள் குறித்தே எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

தலைவர் கலைஞர் பிறந்தநாள், பேராசிரியர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள் ஆகிய நாட்களில் காலை 7.00 மணிக்கு அழைப்பார். "மாவட்டம், நான் சென்னை வந்துட்டேன். தலைவர் வீட்டில் இருக்கிறேன்" என தகவல் தந்து விடுவார். அது மாத்திரமல்லாமல், மாவட்டத்தில் பொதுக் கூட்டம், போராட்டம் என்றால் முதல் ஆளாக இருப்பார். நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்பே அங்கு இருப்பார்.

கடந்த 22ம் தேதி ஜெயங்கொண்டம் நகரில் கழகப் பொதுக் கூட்டம். அண்ணன் இராமதாசன் கண்ணில் படவில்லை. கூட்டம் முடிந்த அரியலூர் பயணிக்கும் போது அலைபேசியில் மெசெஞ்சர் பார்த்தேன். அண்ணன் ராமதாசன் மகன் அருள் செல்வன் ஒரு செய்தி அனுப்பி இருந்தார்.

"அண்ணா வணக்கம்,
என் தகப்பனார் உட்கோட்டை இராமதாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
ஆதலால் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்துகிறார்..".

" அப்பா எப்படி இருக்கிறார்கள்?" எனக் கேட்டு இரவு 11.30க்கு பதில் அனுப்பினேன்.

நேற்று மாலை 4 மணி வாக்கில் அருள் பதில் அனுப்பி இருந்தார். "இன்று ஆஞ்சியோகிராம். இருதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்".

இன்று காலை 7.00 மணிக்கு அந்த செய்தி வந்துவிட்டது, "அண்ணன் இராமதாசன் மறைந்து விட்டார்".

இறுதி அஞ்சலி செலுத்தும் போது, அருள் அழுகைக்கு இடையே சொன்னார், " நேற்றைய மாலையும் அப்பா தான் பதில் அனுப்ப சொன்னாங்க. இரவு இப்படி ஆயிடுச்சி".

மரணத் தருவாயிலும் கழக நினைவு தான்.

# மறக்க இயலாது அண்ணன் இராமதாசனை !

ஞாயிறு, 21 மே, 2017

திராவிட கொள்கை அரசியல்

ஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் !

**********************

கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை பேசி, தேர்தல் அரசியலில் வென்று, கொள்கையை செயல்படுத்தும் கட்சிகள் மிகக்குறைவு. கொள்கை அரசியலிலும் சமூக நீதிக் கொள்கை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கொள்கை பேசி வெல்லுதல் சிரமம். மதவாத, சாதீயவாத கொள்கை பேசும் கட்சிகள் உணர்வைத் தூண்டி தேர்தலில் எளிதாக வென்று விடுவார்கள்.

சமூக நீதி, பகுத்தறிவு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, பெண்ணுரிமை என பேசி தேர்தலில் வென்று, கொள்கையை செயல்படுத்தி இருக்கிற ஒரே இயக்கம் திராவிட இயக்கம் தான் இந்தியாவில். அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம்.

ஓங்கி உச்சந்தலையில் அடித்து, கடவுள் மறுப்புக் கொள்கையையும் பகுத்தறிவு வாதத்தையும் சொன்னவர் பெரியார். முன்னேறிய நாடுகள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கவே தயங்கிய காலத்தில் 1920 களில் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று முழங்கியவர்  பெரியார். நீதிக்கட்சி காலத்திலிருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முன்னெடுக்கப்பட்டது.

எந்த சாதிப் பெயரை சொல்லி ஒடுக்கப்பட்டர்களோ, அந்த சாதியின் பெயராலேயே அவர்கள் கைத்தூக்கி விடப்பட வேண்டுமென வலியுறுத்தி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார் பெரியார்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் பெரியார் முழங்கிய இத்தனை கொள்கை சிந்தனைகளையும் அப்படியே ஏந்திக் கொண்டு தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

"அவங்க சாமி இல்லன்னு சொல்ற கட்சி, நாத்திகவாதிங்க" என்று பிரச்சாரம் செய்து, கடவுளை வணங்கும் பெரும்பான்மை மக்களை திமுகவுக்கு எதிராக திருப்பும் முயற்சி நடந்த நேரத்திலும் அதை எதிர்கொண்டு, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது திமுக.

ஆட்சி அமைந்த பிறகு மெல்ல, மெல்ல பெரியார் முழங்கிய கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

அப்படி நடைமுறைப்படுத்தும் கொள்கைகளால் சில ஆதிக்க சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், பெரும்பான்மை சமூகங்களின் எதிர்ப்பை சந்திக்கும் நிலை, காலம்காலமாக வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை மாற்ற நேரிடும் போது ஏற்படும் முரண்கள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு ஓட்டரசியலிலும் வெல்லுதல் மிக, மிக சிரமமான காரியம். ஆனால் அதை திறம்பட செய்து அய்ந்து முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. இதன் காரணகர்த்தாக்கள் பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்.

அரசியல் ஆணாதிக்கம் மேலோங்கி இருக்கும் வெளி. அதில் பெண்ணுரிமையை நிலை நாட்டுவது சிரமமானக் காரியம். 1929ல் கொள்கை முழக்கமாய் பெரியார் முன் வைத்தக் கொள்கையை 1989 ல் தலைவர் சட்டமாக்கி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை நிலை நாட்டினார். இது மாத்திரம் பெண்களை முன்னேற்றாது, பெண்களுக்கு கல்வி அவசியம் என முடிவெடுத்தக் கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கை சாதூர்யமானது.

எட்டாம் வகுப்பு படித்திருந்தால் பெண் திருமணத்திற்கு ரூபாய் அய்ந்தாயிரம் அரசால் வழங்கப்படும் என அறிவித்தார். அந்தத் தொகையை பெறுவதற்காக ஏழை எளியக் குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்க வைத்தார்கள். எட்டாம் வகுப்பு என்பதை பிறகு பத்தாம் வகுப்பு என ஆக்கினார். பெண் கல்விக்கு இந்தத் திட்டம் மிகப் பெரும் பலம் ஆகும்.

இது மாத்திரமல்லாமல், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்த கலைஞர், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆரமபத்தில் குடும்பத்துப் பெண்கள் பெயரில், ஆண்கள் அதிகாரம் செலுத்தினாலும், படிப்படியாக பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவராக பணியாற்றியவர் திருமதி லதாபாலு. அரியலூர் நகராட்சித் தலைவராக பணியாற்றியவர் திருமதி விஜயலட்சுமி செல்வராஜ். கணவர் அரசியலில் இருந்ததால் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வந்தவர்கள். ஆனால் பின்னாளில் கட்சியில் பதவிக்கு வரும் அளவிற்கு தனித்தன்மையோடு உருவெடுத்தார்கள். இது போல் தமிழகம் முழுதும் பெண்கள் அரசியலுக்கு வரக் காரணமாக, கலைஞர் கொண்டு வந்த 33 சதவீத இட ஒதுக்கீடு அமைந்தது.

அடுத்துப் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை என முடிவெடுத்தார் கலைஞர். மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தார். அந்தக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கினார். சிறு தொழில் செய்து முன்னேற, கடன் உதவிகளை வழங்கினார். வங்கிப் பக்கமே சென்றிராத, கிராமத்து ஏழைப் பெண்கள் இப்போது சர்வசாதாரணமாக வங்கி நடைமுறை அறிந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தான். பொருளாதாரத்திற்கு ஆண்களையே எதிர்பார்த்திருந்தவர்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியம் பெற்றிருக்கிறார்கள்.

இது அத்தனையும் காலம்காலமாக ஆதிக்கத்தில் இருந்த  ஆணாதிக்க சமுதாயத்தை உடைத்து பெண்ணுரிமையை நிலை நாட்டிய மகத்தானப் பணி. இந்த நடவடிக்கைகள் தமிழகத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதற்கு வித்திட்டு செயல்படுத்திய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், முதல்வர் கலைஞர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களிப்பும் உண்டு. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் படும்பாடு, இந்தியாவின் மற்ற இயக்கங்கள் பெண்ணுரிமையில் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும். திராவிட இயக்கம் கொள்கை வழி நிற்பது விளங்கும்.

மதவாதத்திற்கும், சாதீயவாதத்திற்கும் எதிரான கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் சாதி மறுப்பு திருமணங்களுக்கு அரசு நிதி உதவி திட்டம் வழங்கப்படுவதற்கு எதிர் கருத்துக்கள் இருந்தாலும் திமுக பின்வாங்கவில்லை.

இட ஒதுக்கீடு கொள்கைக்கு இந்தியா முழுதும் பல்வேறு இயக்கங்கள் போராடியிருந்தாலும், அதனை சட்டப்பூர்வமாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான். படிப்படியாக இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தி, 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான். எம்.ஜி.ஆர் வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என அறிவித்து சமூக நீதிக்கொள்கையில் சறுக்கினாலும், எதிர்ப்பு வந்த உடன் பின்வாங்கினார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டரீதியான சவாலை எதிர்கொண்டு நிலைத்தது. பிற்பட்டோர் சமூகத்தில் வன்னியர் உட்பட 108 சாதியினரை மிகப்பிற்பட்டோர் என அறிவித்து 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான இடஒதுக்கீட்டில் 3சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார். இஸ்லாம் சமூகத்திற்கு தனி ஒதுக்கீடு வழங்கினார் கலைஞர்.

சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கூடுதல் ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தமிழ்நாட்டையும், பெரியாரையும் தான் உதாரணம் காட்டிப் பேசினார்.

அப்படி திராவிட இயக்கம் இந்தியாவிற்கே வழிகாட்டி நிற்கிறது. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கிறேன் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். அது தான் "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்". இதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு வந்தது. தங்கள் கையில் இருந்த கோவில்கள் கையை விட்டு நழுவுவதை பிராமணர்கள் ஏற்கவில்லை. நெடுங்காலமாக இந்த வழக்கத்திலேயே ஊறிப் போன பிராமணர் அல்லாதோருக்கும் சஞ்சலம் தான்.

தங்கள் முன்னோர் கட்டிய கோவிலிலேயே கர்ப்பகிரகத்தில் அனுமதிக்கப்படாமல் இருப்பதை பொதுமக்களே எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக வந்த சட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்தபோது, அதைக் கூட மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல்  கொள்கையில் உறுதியாக நின்றார் கலைஞர்.

" மாநில சுயாட்சி" கொள்கை தி.மு.கவின் உயிர் நாடிக் கொள்கை. பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது, அதனை முழுமையாக எதிர்த்த இயக்கம் தி.மு.க தான் இந்தியாவிலேயே. அதிலும் இழப்பு வரும் என்று தெரிந்தும் எதிர்த்தார் தலைவர் கலைஞர். இதனால் ஆட்சியே பறிபோனது. அத்தோடு நிற்கவில்லை மத்திய அரசு, தி.மு.கவின் தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்பட்டனர். கொள்கைக்காக ஆட்சியை இழந்ததோடு மாத்திரமல்லாமல் தியாகமும் செய்தது தி.மு.க.

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்த போது, அதனை உயிர் தியாகம் செய்து எதிர்த்த இயக்கம் திராவிட இயக்கம் தான். அதன் காரணமாகத் தான், தமிழ் மாத்திரம் இந்தியால் அழிக்கப்படாமல் இன்றும் சீரிளமையோடு இருக்கிறது. பிகாரி, மராத்தி போன்ற வட இந்தியாவின் எண்ணற்ற மொழிகள் மெல்ல அழியத் துவங்கியுள்ளன. இப்போது தென் மாநிலங்களில் இந்திக்கு எதிரான குரல் வலு பெற ஆரம்பித்துள்ளது.

இப்போது மோடி அரசு, சர்வாதிகாரமாக இந்தியையும், இந்துத்துவாவையும் திணிக்க முற்படுகிற நேரத்தில் ஒரே ஒரு குரல் தான் வலுவாக எதிர்த்தது, இந்திய அளவில். அது தி.மு.கவின் செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் குரல் தான். இந்திய அளவில் பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது அவர் குரல்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என்று மத்திய அரசின் அதிகாரங்களைக் கொண்டு மாநிலக் கட்சிகளை மோடி அரசு மிரட்டிக் கொண்டிருந்தாலும், தைரியமாக ஒலிக்கிறது தி.மு.கவின் கொள்கைக் குரல்.

*********************************

நக்கீரன் மே 08- 10 இதழில், திராவிட ஆட்சி 50 ( 1967 - 2017) தொடரில் இடம் பெற்ற எனது கட்டுரை.