பிரபலமான இடுகைகள்

வியாழன், 13 ஜூலை, 2017

கவிராஜன் கதை

'என் ஜன்னலின் வழியே'
பார்த்துக் கொண்டிருந்தேன்
மெல்ல பூங்கதவு தாழ்திறந்தது

அந்திமழை பொழியப் போகிறதென
'இதனால் சகலமானவர்களுக்கும்' அறிவிக்கப்பட்டது

'இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்'
வாருங்கள் என்றழைத்து 'கல்வெட்டுகளி'ல்
அவர்தம் பெயர் பொறித்தான்

அவன் சொன்னது இவை
'என் பழைய பனை ஓலைகள்'
நவீன அலைபேசி செயலிகளை வீழ்த்துகின்றன

கண்ணதாசனுக்கு பிறகு சோர்ந்துகிடந்த
திரைத்தமிழுக்கு 'ரத்ததானம்' ஈந்தான்

தம்மை படைத்த தமிழை
'சிற்பியே உன்னை செதுக்குகிறேன்' என செதுக்கி, செதுக்கி அழகுப்படுத்தினான்

'இந்த பூக்கள் விற்பனைக்கல்ல'
என அவன் சொன்னாலும்
அவன் பாடல்களை விருது கொடுத்து
வாங்கியன அரசுகள்

இவன் தந்த சின்ன,சின்ன ஆசை
'இன்னொரு தேசிய கீதம்' ஆனது
பூங்காற்று திரும்புமா
'கருவாச்சி காவியம்" ஆனது

'வைகறை மேகங்கள்' திரட்டி
'பெய்யென பெய்யும் மழை'
பொழியச் செய்து
'தண்ணீர் தேசம்' கட்டியவன்

ராசையாவோடு முரண் வந்த நேரம் அது
'ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்'

'எல்லா நதியிலும் என் ஓடம்' என
'வடுகப்பட்டி முதல் வால்கா வரை'
துடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறான்

'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்'
என ஓய்வெடுங்கள் என்றாலும்
'வில்லோடு வா நிலவே' என்று
கவிப்போருக்கு கிளம்பி விடுவான்

சமீபகாலமாக
'காவி நிறத்தில் ஒரு காதல்'-ஓ
சந்தேகம் கூடுகட்டியது
இல்லை,இல்லை
'என் மௌனத்தின் சப்தங்க'ளும்
திராவிடம் தான் பேசும் என்றான்

திரை 'வானம் தொட்டுவிடும் தூரம் தான்'
பறந்தே விடுவான் என்றெண்ண
என் 'கொடி மரத்தின் வேர்கள்'
இலக்கிய மண்ணில் தானென்று
முரசறைந்தான்

'இதுவரை நான்'
'ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்' என பறந்தவன்
ராஜாளியாய் 'பாற்கடல்' வென்றான்

அவ்வப்போது புத்துணர
'மீண்டும் என் தொட்டிலுக்கு' என
தேனீமண் தவழ்வான்

நெஞ்சத்து 'கேள்விகளால் ஒரு வேள்வி'
நடத்தி
'கள்ளிகாட்டு இதிகாசம்' கண்டான்

'நேற்று போட்ட கோலம்' அல்ல
இந்த 'கவிராஜன் கதை'
இது பழம் தமிழை
'திருத்தி எழுதிய தீர்ப்புகள்'

# 'தமிழுக்கு நிறம் உண்டு'; வடுகப்பட்டி கருப்பு !

( '--' குறிக்குள் இருப்பவை கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூல்கள். இன்று கவிப்பேரரசு பிறந்தநாள்)

__எஸ்.எஸ்.சிவசங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக