பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தேமதுர தமிழோசை உலகமெலாம்..

கலைஞன் பதிப்பகம், சென்னையில் தமிழ் நூல்களை பதிப்பித்துக் கொடுத்து தமிழ்பணியை சிறப்பாக செய்யும் அமைப்பு . 1956ல் மாசிலாமணி அய்யா அவர்கள் துவங்கியது தான் இந்த "கலைஞன் பதிப்பகம்".

ஒரு கட்டத்தில் தனது மகன் நந்தன் அவர்களிடம் பொறுப்பை கைமாற்றி விட்டார் அய்யா மாசிலாமணி. தமிழ் நூல்களை பதிப்பித்து தமிழ் பணியாற்றிய தந்தை வழியில், நந்தன் அவர்களும் தமிழ்பணி தொடர்கிறார்.

கலைஞன் பதிப்பகம் இதுவரை 5,000  நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இதில் பெரும் பகுதி தமிழ் சார்ந்ததாக இருக்கும். 

கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைகழக தமிழ் துறையும் இணைந்து அடுத்தக் கட்ட பணியை கடந்த ஆண்டு துவங்கினார்கள். நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களை உற்சாகப்படுத்தும் பணி.

கடந்த ஆண்டு கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து 400 நூல்களை வெளிக் கொணர்ந்தார்கள். ஆய்வரங்கம் நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டதன் தொடர்ச்சியாக இந்தப் பணி.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பணி நீண்ட வரலாறுடையது. பழம் தமிழ் நூல்களை புதுப்பித்தார்கள். ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை நூல் வடிவம் கொடுத்தார்கள். அதன் நீட்சியாக இப்போது இந்தப் பணி.

தமிழ்த்துறை தலைவர் பேராசியர் அரங்க.பாரி அவர்கள் தனி அக்கறையோடு இந்த புதுமையான திட்டத்தை வடிவமைத்தார். அடுத்து ஆயிரம் நூல்களை வெளிக் கொணரும் திட்டம் வைத்திருக்கிறார்.

தமிழ் அறிஞர்கள், ஆளுமைகள் குறித்து நூல் அமைந்திருக்க வேண்டும். நூறு பக்க அளவில் நூல் அமைந்திருக்கும். நூலை வெளியிடும் நிகழ்ச்சிக்கு முன் இருக்கும் அமர்வில் நூல் சுருக்கம் அதன் ஆசிரியரால் வாசிக்கப்படும்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் கைக்கோர்த்துள்ளன. மலேசியாவில் உள்ள மலேயப் பல்கலைக்கழகம் கூடுதல் நெருக்கம். காரணம், மலேசியத் தமிழர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய நூல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதே போல இந்த ஆண்டு மலேசியாவில் வெளியிட திட்டமிட்டனர்.

மலேசியப் பல்கலைக்கழகம் நூறாண்டு கால வரலாறு உடையது. சிங்கப்பூரில் முதலில் துவக்கப்பட்ட மருத்துவகல்லூரி பின்னர் பல்கலைக்கழகமாக விரிவாக்கப்பட்டது.

சிங்கப்பூரும், மலேசியாவும் பிரிந்த பிறகு "மலேயப் பல்கலைக்கழக"மானது. மலேயப் பல்கலைக்கழகத்தில் 1955ல் இந்திய ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது.

இந்த மையம் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து உலக தமிழறிஞர்கள் மாநாடும், நூல் வெளியீட்டு விழாவும் நடத்தியது.

இதில் மலேசியாவை சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட 100 நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எழுதிய 25 நூல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு நாட்கள் அமர்வுக்கு பிறகு, வெளியீட்டு விழா நடைபெற்றது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் மலேயப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. மருத்துவம் முதல் அனைத்துத் துறைகளும் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் அதிபராக விளங்கிய எஸ்.ஆர்.நாதன் மலேயப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள்.

இதே போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் மலேசியாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மலேசியாவின் சுதந்திரப் போராட்ட வீரரும், மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவராக விளங்கியவருமான வி.டி.சம்பந்தன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.

மலேயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் மோகனதாஸ், பேராசிரியர்கள் முனைவர் கிருஷ்ணன் மணியன், முனைவர் குமரன் என மலேசியத் தமிழர்கள். தமிழ் ஆர்வலர்கள். இவர்கள் ஆராய்ச்சி மற்றும் தேர்வுப் பணிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பில் இருப்பவர்கள்.

இப்படி ஒன்றுக்கொன்று பிணைப்பாக உள்ள அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புற  செய்திருந்தார்கள். இறுதி நாள் விழாவில் நானும் பங்கேற்றேன்.

# தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக